தூதுரைக்கின்ற பணி

சீடர்கள் அனைவருமே இயேசுவின் தூதுவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். தூதர் என்பவர் ஓர் அரசவையில் முக்கியமான மனிதராக சித்தரிக்கப்படுகிறார். இன்றைக்கு உள்ள அரசியல் உலகில், ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் தூதுவர்கள் இருக்கிறார்கள். அண்டை நாட்டில் எந்தவொரு பிரச்சனை என்றாலும், அந்த நாட்டில் வாழக்கூடிய தனது குடிமக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும், உடனடியாக தன்னுடைய தூதரகத்தில் தான், தொடர்புடைய நாடு விசாரிக்கும். ஆக, தூதுவர் என்பது முக்கியமான பணி. எல்லோரையும் அந்த பணியில் அமர்த்திவிட முடியாது. அது மரியாதைக்குரிய பணி மட்டுமல்ல, பொறுப்புமிக்க பணியும் கூட. அந்த பணியைச் செய்யக்கூடிவர்களாக சீடர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்த தூதர் அரசரின் நம்பிக்கைக்குரியவராக கருதப்படுகிறார். ஏனென்றால், தூதுரைப்பதற்கு அறிவு மட்டும் இருந்தால் போதாது. மாறாக, அடிப்படை வாழ்வியல் நெறிகளான உண்மை, நேர்மை மற்றும் நம்பிக்கை இருக்கிறவர்கள் தான் சிறந்த தூதுவர்களாக செயல்பட முடியும். அந்த வகையில் ஒரு தூதர் அரசரின் விசுவாசி. அரசர் அவரை முழுமையாக நம்புகிறார். நம்பிக்கைக்குரியவர்களைத்தான் அரசர் அந்த பணியில் அமர்த்துகிறார். இயேசுவின் சீடர்கள், இத்தகைய தூதுரைக்கின்ற பணியைச் செய்கிறார் என்றால், அவர்கள் அனைவருமே இயேசுவின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறார்கள். அவர்களை இயேசு முழுமையாக நம்புகிறார். அவர்கள் மட்டில், நம்பிக்கையும், அன்பும் அதிகமாக வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக சீடர்கள் வாழ்வதுதான், வாழ்வின் இலட்சியமாக இருக்க முடியும்.

திருமுழுக்கு பெற்றிருக்கிற அனைவருமே இயேசுவின் தூதுவர்கள் தான். நற்செய்தி அறிவிப்பதற்காக, அவருடைய செய்தியைச் சொல்வதற்காக நம்மை அழைத்திருக்கிறார். அது ஒரு நம்பிக்கைக்குரிய பணி. எல்லாருக்கு கிடைத்துவிடாத பணி. ஆனால், நம் மட்டில், இயேசு வைத்திருக்கிற நம்பிக்கையின் அடிப்படையில் நமக்கு தரப்பட்டிருக்கிற இந்த பணியை நிறைவோடு செய்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.