தூய்மையான உள்ளம்

யாக்கோபு தன்னுடைய திருமுகத்தை உலகம் முழுவதிலும் சிதறுண்டு கிடக்கிற, யூதக்கிறிஸ்தவர்களுக்கு எழுதுகிறார். ஆயினும், இது எல்லாருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்வு என்பது எளிதானது அல்ல. கிறிஸ்தவனாக வாழ்வது என்றால் என்ன? அதற்கான விழுமியங்கள் என்னென்ன? என்பதை, இந்த திருமுகம் முழுவதிலும் எழுதியிருக்கிறார். அதில் முக்கியமான விழுமியமாக பார்க்கப்படுவது, ஒருவரது தூய்மையான வாழ்க்கை. ஒருவருடைய பணிவு தான், தூய்மையான உள்ளத்தோடு அவரை இறைவனிடம் அழைத்துச்செல்லும் என்பது, அவருடைய அறிவுரையாக இருக்கிறது. யார் பெரியவர்? என்று தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்ட அந்த நிகழ்வு, நிச்சயம் யாக்கோபிற்கு தங்களைப் பற்றி, சிரிப்பை வரவழைத்திருக்கும். இப்படியெல்லாம் இருந்திருக்கிறோமே என்ற நினைவை அவருக்கு தந்திருக்க கூடும்.

மனிதர்கள் கூடிவாழ்கிறபோது, தங்களுக்குள் யார் பெரியவர்? என்கிற போட்டி எழுவது இயல்பு. அறிவுள்ளவர்கள் தங்கள் அறிவைக்கொண்டு மற்றவர்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள். தங்களின் அறிவுத்திறமையைக் கொண்டு, தங்களை பெரியவர்களாக காட்டிக்கொள்ள முனைகிறார்கள். வலிமையுள்ளவர்கள் தங்கள் உடல் பலத்தைக்காட்டி வறியவர்களை அடக்குமுறைப்படுத்துகிறார்கள். பணபலம் உள்ளவர்கள் தங்கள் பணபலத்தைக் கொண்டு, பெருமைபாராட்டிக் கொள்கிறார்கள். இவையனைத்துமே தூய்மையற்ற வாழ்வாகத்தான் இருக்க முடியும். அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் பணிவு உள்ளவர்களாக வாழ வேண்டும் என்கிற சிந்தனையை அவர் தருகிறார்.

நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும், தூய்மையான உள்ளம் உடையவர்களாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். நாம் கொண்டிருக்கிற அந்த எண்ணம், நம்மை பணிவுள்ளவர்களாக வாழ வைக்கும். இறைவனின் அன்பும், அருளும் நம்மோடு இருக்கிறபோது, நமக்கு எதுவும் சாத்தியமே.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.