தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறிய நமக்கு அருளப்பட்டது.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்தநாளிலும் ஆண்டவர் நமக்கு அருளிய அவருடைய மகிமையின் ராஜ்யத்தை நாம் அலட்சியம் செய்யாமல் அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்படிந்து, பயந்து நடந்து அந்த ராஜ்யத்தில் பங்குபெறும் பேற்றை அடைவோமாக. ஆண்டவரைப்பற்றி அறிந்தும் அவரை ஏதோ கோடி தெய்வத்தில் அவரும் ஒருவர் என்று இல்லாமல், அவர் ஒருவரே தெய்வம் என்று உணர்ந்தவர்களாய் செயல்படுவோம். எவ்வளவோ பேர்கள் அறிந்தும் அலட்சியம் செய்வதுபோல் நாம் இல்லாமல் அவர் காட்டும் வழியில் நடந்து அவருக்கே மகிமை உண்டு பண்ணுவோம்.

கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துக கொள்ளாமலும் இருக்காதபடிக்கு நம்முடைய இருதயத்தில்உணர்ந்து மனந்திருந்துவோம். ஏனெனில் அநேக மக்கள் கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது. காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள். எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கிறார்கள். நானும் அவர்களை குணமாக்காமல் இருக்கிறேன். உங்கள் கண்களோ பேறுபெற்றவை. ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகள் பேறுபெற்றவை, ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன். பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும், நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று மத்தேயு 13:14 லிருந்து 17 வரை வாசிக்கிறோம்.

ஆகையால் நம்மை தேடி வந்து இரட்சித்து நம்மை நோக்கி என் பிள்ளைகளே, நீங்கள் அஞ்சவேண்டாம். உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்த திருவுளம் கொண்டுள்ளார். அவருடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது. அவருடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. அதின் இரகசியத்தை நான் உங்களுக்கு வெளிப்படுத்தி உங்களை என்னண்டை மீட்டுக்கொள்வேன் என்று ஆண்டவர் திருவுளம் பற்றுகிறார். எந்த சோதனையும் தற்காலத்தில் சந்தோசமாய் காணாமல் துக்கமாய் காணும். ஆகிலும் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் அனுதினமும் வேதத்தை ஆராய்ந்து படித்து ஆண்டவரின் ராஜ்யத்தில் பிரவேசிக்க முயலுவோம். அழிந்து போகும் இந்த உலக வாழ்க்கையை வெறுத்து என்றென்றும் நித்திய, நித்திய காலமாய் வாழப்போகும் தேவனின் ராஜ்யத்தை நாடி தேடி அதைக் கண்டுக்கொள்வோம்.

ஜெபம்

அன்பின் இறைவா இந்த பூமியில் வாழும் எங்களை கண்ணோக்கி பாரும். இந்த அடிமைத்தனமான வாழ்வை வெறுத்து உமது ராஜ்யத்தின் இரகசியத்தை அறிந்து அதில் பிரவேசிக்க எங்களுக்கு நன்கு போதித்து வழிநடத்தும். நீர் ஒருவரே தெய்வம் என்று கண்டு கேட்டு, இருதயத்தில் உணர்ந்தவர்களாய் செயல்பட எங்களுக்கு அனுதினமும் போதித்து காத்துக்கொள்ளும். உமது வாழ்வை அலட்சியம் செய்யாதபடிக்கு நாங்கள் ஒவ்வொருவரும் நீர் தரும் நித்திய ராஜ்யத்தில் பிரவேசிக்க உதவி செய்தருளும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பரம தந்தையே! ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.