நன்மைக்குத் துணைபோவோம்

தலைமைக்குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் இயேசுவைப்பிடிக்காமல் திரும்பி வந்தனர். அவரது போதனையைக் கேட்டு அவர்களே மலைத்துப்போயினர். இதைக்கேட்ட பரிசேயர்கள் அவர்கள் மீது கோபமடைந்தனர். அப்போது நிக்கதேம், இயேசுவுக்காகப் பரிந்து பேசுகிறார். தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்திக்கொள்ள, சட்டத்தைக் கையிலெடுக்கிறார். ”பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம். அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம்” (விடுதலைப்பயணம் 23: 1). இயேசுவைப்பற்றி அவர்கள் சொல்வது தவறு என்பது நிக்கதேமுக்கு தெரிந்திருந்தது. அதை எதிர்த்துக் கேட்கவும் செய்கிறார். ஆனாலும், அவர் பயப்படுகிறார். பட்டும் படாமலும் பேசி, தனக்கு ஆதரவு இல்லையென்று தெரிந்தவுடன், அவர் வாய்மூடி மெளனியாகி விடுகிறார்.

இன்றைக்கு பொதுநன்மைக்காய் உழைக்கிற மனிதர்கள் நம் மத்தியில் பலர் இருந்தாலும், எவற்றையும் எதிர்கொள்ள அவர்கள் துணிவு கொண்டிருந்தாலும், குறைந்தபட்சம் அவர்களுக்கு நமது ஆதரவு தெரிவிக்கக்கூட நாம் தயங்கிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் மீது அவதூறுகள் வீசப்படுகிறபோது, அவர்கள் அநியாயமாகத்தண்டிக்கப்படுகிறபோது, தட்டிக்கேட்காமல், நமக்கு ஏன் வீண் வம்பு என ஒதுங்குவதற்கு முயல்கிறோம். அது தவறு என்பதை நாம் உணர வேண்டும். பொதுநன்மைக்காய் உழைக்கிறவர்களி சார்பாக நாம் நிற்காதது, தீமைக்குத் துணைபோவது என்பதை நாம் உணர வேண்டும்.

நமது வாழ்வில் நீதிக்காய் உழைப்போரின் கைகளை வலுப்படுத்த, அவர்களோடு நாமும் சேர்ந்து உழைக்க, நமக்கு மனவலிமை வேண்டி ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம். நமது வாழ்வு உண்மையான சாட்சிய வாழ்வாக இருக்க, தொடர்ந்து உறுதி எடுப்போம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.