நன்மை செய்வதே வாழ்க்கை

”ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா? இல்லையா?” – என்பது கடினமான கேள்வி. பதில் சொல்ல முடியாத கேள்வியல்ல. ஆனால், பதில் சொல்ல தயங்கக்கூடிய கேள்வி. அப்படிப்பட்ட கேள்வியை இயேசு கேட்கிறார். நிச்சயம், பரிசேயர்களின் உள்ளத்தில், அதற்கான பதில் உடனே வந்திருக்கும். ”முறையல்ல” என்பதாகத்தான், அவர்களுடைய பதில் இருந்திருக்கும். ஆனாலும், சொல்லத் தயங்குகிறார்கள். ஏன்? அவர்களைப் பொறுத்தவரையில் அது சரியான பதிலாக இருந்தாலும், அவர்களின் பதில் மக்கள் மத்தியில் வெறுப்பைக் கொடுக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். எனவே தான், அமைதியாக இருந்தனர்.

சாதாரண மக்களுக்கு தெரிந்த மனிதநேயம் கூட பரிசேயர்களுக்கு தெரியாதது வேதனையிலும் வேதனை. அவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசினார்கள். சாதாரண பாமர மக்கள், மனிதநேயத்தைக் காப்பாற்றுவதுதான், சிறந்த ஒன்றாக இருக்கும் என எண்ணுகிறபோது, படித்த, அறிவாற்றலோடு விளங்குகிற பரிசேயர்கள், அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பது, நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதிகாரத்தில் இருக்கிறவர்களும், ஆணவத்தில் இருக்கிறவர்களும் இத்தகைய மனநிலையோடு தான் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்திலிருந்து, இத்தகைய எண்ணங்கள் களையப்பட வேண்டும்.

இயேசு அதிகாரவர்க்கத்தினருக்கு பயந்தவர் அல்ல. நன்மை செய்ய வேண்டும் என்றால், நன்மை கிடைக்கும் என்றால், அதற்கான எத்தகைய கடினமான முயற்சியையும் எடுப்பதற்கு தயங்காதவர். அந்த துணிவு தான், சென்ற இடங்களில் எல்லாம் இயேசுவை நன்மை செய்ய தூண்டியது. நாமும், இயேசுவைப்போல நன்மை செய்ய தயங்காது வாழ அருள்வேண்டுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.