நமது கடமையைச் செய்வோம்

இயேசுவைப்பற்றி ஏரோது அரசன் கேட்பது சற்று அதிசயமாக இருக்கிறது. ஏரோது ஓர் அரசன். இயேசுவோ சாதாரண தச்சரின் மகன். ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த இயேசுவைப்பற்றி, ஏரோதுக்கு எப்படி தெரிய வருகிறது? இயேசுவின் சீடர்கள் இப்போதுதான், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, இயேசுவின் நற்செய்தியை அறிவித்திருக்கிறார்கள். அந்த நற்செய்தி மக்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத்தான், இந்த நற்செய்தி நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இயேசுவின் பணிவாழ்வு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிற அழுத்தமான செய்தியை, நற்செய்தி நமக்கு வலியுறுத்திக்கூறுகிறது. ஏரோது அதை எதிர்மறையாகத்தான் பார்க்கிறான். காரணம், அவனுக்கு திருமுழுக்கு யோவானை கொலை செய்துவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சியும், தனது பதவி போய்விடுமோ? என்கிற பய உணர்வும் அதிகமாக அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. நாம் நியாயமாக, நேர்மையாக இருக்கிறபோது, யாருக்கும் பயப்படத் தேவையில்லை. இன்றைக்கு ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம்? என்ன செய்ய வேண்டும்? என்பதில் அவர்களுக்கு அக்கறையில்லை.

நமது வாழ்விலும் பெரும்பாலும், பெயருக்காக, புகழுக்காகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது கடமையை சிறப்பாகச் செய்கிறபோது, வரவேண்டியவை தானாக வரும் என்று நினைப்பதில்லை. இயேசு எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் செய்ய வேண்டியதைச் செய்கிறார். அவருக்குத் தேவையான எல்லாமே கிடைத்தது. பலனை எதிர்பாராது, நமது கடமையைச் செய்வோம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.