நமது வலிமையாகிய கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்
திருப்பாடல் 81: 2 – 3, 4 – 5, 9 – 10
கடவுளை வலிமையானவராக இந்த திருப்பாடல் சித்தரிக்கிறது. கடவுளின் வலிமையை புகழ்ந்து பாடுவதாகவும் இது அமைந்திருக்கிறது. இஸ்ரயேல் மக்களின் பார்வையில் பல்வேறு தெய்வங்கள் இருந்தாலும், கடவுள் தான் வலிமையுள்ளவராக இருக்கிறார். ஏனென்றால், அவர் தான் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தவர். எகிப்தில் இருக்கிற தெய்வங்களையெல்லாம் தோற்கடித்து விட்டு, அவர்களுக்கு வெற்றி தேடித்தந்தவர். அந்த கடவுளிடம் உண்மையான விசுவாசம் உள்ளவர்களாக இருக்கும்படி, இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது.
ஒரு விளையாட்டு வீரரை எடுத்துக்கொண்டால், அவருக்கென்று பலம் இருக்கும், பலவீனமும் இருக்கும். அவருடைய பலம் தான், அவருடைய வெற்றிக்கு காரணமாக அமைய முடியும். அந்த பலத்தில் தான், அவர் களத்தில் போராடுகிறார். அந்த பலத்தில் தான், வெற்றிகளைக் குவிக்கிறார். இங்கே, கடவுளை இஸ்ரயேல் மக்களின் பலமாக, ஆசிரியர் குறிப்பிடுகிறார். கடவுள் இஸ்ரயேல் மக்களோடு இருக்கிறவரை, எவராலும் அவர்களை வீழ்த்திவிட முடியாது. அதேவேளையில், கடவுள் இல்லையென்றால், அவர்களால் வெற்றிகளையும் பெற்றுவிட முடியாது. ஆகவே, வெற்றிக்கு காரணமாக இருக்கும் ஆண்டவரிடத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார்.
இறைவனை பாதுகாவலாக கொண்டிருக்கிற பிள்ளைகளுக்கு பயம் இருக்கத்தேவையில்லை. இறைவன் எப்போதும் நம்மைக்காக்கக்கூடியவராக இருக்கிறார். நம் அனைவருக்கும் கேடயமுமாக இருந்து, நம்மையெல்லாம் வழிநடத்திக்கொண்டிருக்கிறார். அந்த இறைவனிடத்தில் முழுமையாக நம்பிக்கை வைப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்