நமது வாழ்வை சீர்தூக்கிப்பார்ப்போம்.

இயேசுவுக்கு தன்னுடைய சீடர்களைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருந்தது. ஒவ்வொருவரைப்பற்றியும் முழுமையாக அறிந்திருந்தார். யூதாஸ் எப்படிப்பட்டவர்? அவரை நம்பலாமா? அவர் என்ன செய்யப்போகிறார்? என்பதையும் இயேசு அறிந்திருந்தார். எனவேதான், யோவான் 6: 70 ல் ”பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்து கொண்டேன் அல்லவா? ஆயினும் உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்” என்று சொல்கிறார். யூதாஸ் எப்படிப்பட்டவர்? என்பது இயேசுவுக்குத் தெளிவாகத் தொந்ததால் தான் இப்படி இயேசு பேசுகிறார்.

இவ்வளவுக்கு யூதாசைப்பற்றித் தெரிந்தவர், ஏன் யூதாசிடம் முக்கியமானப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். இயேசு யூதாசுக்கு திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி தருகிறார். ஒருவன் ஒரேநாளில் கெட்டவனாக மாற முடியாது. அதேபோல், ஒருவன் ஒரேநாளில் நல்லவனாக மாற முடியாது. கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் சிறிது, சிறிதாக யூதாஸ் தன்னையே கறைபடித்துக்கொள்கிறார். தான் செய்வது சரிதான் என்று நினைத்துக்கொண்டு ஒருவன் தவறு செய்து கொண்டிருக்கலாம். ஆனால், நீ செய்வது தவறு என மற்றவர் சொல்லியும், திருந்தாமல் ஒருவன் தவறு செய்கிறான் என்றால், அவனை என்ன செய்வது? மற்றவரின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், குறைந்தபட்சம், அதில் ஏதாவது உண்மையிருக்கிறதா? என்ற சிந்தனையையாவது செய்ய வேண்டும். அதில் யூதாஸ் தவறிவிடுகிறார். தனக்கான முடிவைத்தேடிக்கொள்கிறார்.

கடவுள் கொடுக்கும் வாய்ப்புக்களை நாம் திருந்துவதற்கான அழைப்பாக ஏற்றுக்கொண்டு, திருந்தி வாழ முன்வரவேண்டும். பவுலடியாரும் தொடக்கத்தில், தான் செய்வது சரி என்றுதான் நினைத்து, கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார். ஆனால், அவரிடத்தில் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற தேடல் இருந்ததால், தன்னை மாற்றிக்கொண்டார். நாமும் அதே போல் திருந்திவாழ முடிவெடுப்போம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.