நம்மை உயிர் வாழச்செய்த இறைவன் போற்றி

திருப்பாடல் 66: 1 – 3a, 5&8, 16 – 17

செபம் என்பது விண்ணப்பங்களையும் மன்றாட்டுக்களையும் அடுக்கிக்கொண்டே செல்வதாக இருக்கக்கூடாது. மாறாக, அது புகழ்ச்சியின் செபமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடல் தான், இன்றைய திருப்பாடல். நம்முடைய செபம் என்று சொல்லப்படுவது அடுக்கடுக்கான விண்ணப்பங்கள் தான். விண்ணப்பங்களையும், மன்றாட்டுக்களையும் தாண்டி, நம்மால் சிந்திக்க முடியவில்லை. அதற்குள்ளாகவே நம்முடய செபத்தை அமைத்துக் கொள்வதில் நாம் நிறைவு அடைகிறோம். உண்மையான செபம் புகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, நம்முடைய செபம் அமைய வேண்டும் என்பது இங்கே நமக்கு விடுக்கப்படுகிற செய்தி.

இஸ்ரயேல் மக்கள் செபத்திற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தனர். ஒரு நாளில் பல வேளைகளில் செபித்தனர். அதனை கடமையாகவும் எண்ணினர். அவர்களுடைய செபம் புகழ்ச்சியை அடித்தளமாகக் கொண்ட செபங்களாக இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலில்லை. ஏனென்றால், அவர்கள் இறைவனிடமிருந்து பெறுவதற்கு ஒன்றுமேயில்லை. அவர்கள் ஏற்கெனவே நிறைய பெற்றிருந்தனர். பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னாலே, அவர்களுக்கு இந்த உலகம் போதாது. அந்த அளவுக்கு இஸ்ரயேல் மக்கள், மற்றவர்களைக் காட்டிலும் நிறைவாகப் பெற்றிருந்தனர். அதிகமாகப் பெற்றிருந்தனர். எனவே தான், இஸ்ரயேல் மக்களின் வழிபாடு புகழ்ச்சிக்கு அதிகமான நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தது.

இறைவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட நன்மையான காரியங்களை நினைத்துப்பார்த்தால், அவற்றிற்காக நன்றி செலுத்துவதற்கே நம்முடைய நாட்கள் போதாததாக இருக்கும். நம்முடைய செபமும், விண்ணப்பத்தை அதிகமாக வலியுறுத்துவதை விட, புகழ்ச்சிக்கு அதிக நேரம் ஒதுக்குவதாக இருக்கட்டும்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.