நற்செய்தி அறிவிக்கிற சீடர்களாக வாழ……

பழைய ஏற்பாட்டிலே கடவுள் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு தான் வாக்களித்த தேசத்தைத் தருகிறார். வாக்களிக்கப்பட்ட மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால், விரைவில் அவர்கள் தங்கள் கடவுளை மறந்துவிட்டு, கடவுளை விட்டு விலகிச்செல்கிறார்கள். அதற்கான பலனை விரைவில் அனுபவிக்கிறார்கள். அடிமைகளாக மாறுகிறார்கள். இந்த நேரத்தில் தங்களின் இந்த நிலைமைக்கு காரணம் தங்களுடைய பாவம் தான் என்பதை உணர்ந்து கடவுளிடம் மன்னிப்பு வேண்டுகிறார்கள். கடவுளும் அவர்களை மீட்பதற்கு மெசியாவை அனுப்புவதாக வாக்குறுதி தருகிறார். எனவே, இஸ்ரயேல் மக்கள் வாக்களிப்பட்ட மெசியாவிற்காக காத்திருக்கிறார்கள்.

இந்தப்பிண்ணனியில் தான் பேதுரு இயேசுவை “மெசியா” என்று சொல்கிறார். இயேசு கிறிஸ்து பேதுரு தன்னைப்பற்றி “தான் மெசியா, உலகிற்கு வரவிருந்தவர்” என்று கூறியதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அதேவேளையில் தான் மெசியா என்பதை எவருக்கும் சொல்ல வேண்டாம் என்பதைக் கண்டிப்பாகக்கூறுகிறார். எதற்காக இயேசு தான் மெசியா என்பதை மற்றவர்கள் அறிவதைத்தவிர்க்க வேண்டும்? இயேசுவுடனான நம்முடைய உறவு தனிப்பட்ட உறவு. மற்றவர்கள் சொல்வதனால் நாம் இயேசுவை ஏற்றுக்கொள்வதாக இருக்கக்கூடாது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் இயேசுவை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். அனுபவத்திலே வருகிற விசுவாசம் தான் வாழ்வை மாற்றக்கூடிய விசுவாசமாக இருக்கும்.

இயேசுவின் சீடர்களின் வாழ்வில் இதைத்தான் பார்க்கிறோம். இயேசுவோடு மூன்று ஆண்டுகள் இருந்திருந்தாலும் அவர்கள் இயேசுவை அனுபவிக்கவில்லை. எனவேதான், அவருக்கு ஆபத்து என்றதும் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடிவிடுகிறார்கள். ஆனால், என்றைக்கு அவர்கள் இயேசுவை அனுபவித்தார்களோ, அன்றே தங்கள் உயிரை இழந்தாலும் இயேசுவுக்காக வாழ முன்வருகிறார்கள். அப்படிப்பட்ட அனுபவத்தை நாம் பெறுவதே இயேசுவின் விருப்பம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.