நல்ல சிந்தனைகளை வரவேற்போம்

தொழிலாளர் புனித யோசேப்பு

இந்த உலகத்தில் பல மனிதர்களால் கொடுக்கப்பட்ட நல்ல கருத்துக்கள், நல்ல சிந்தனைகள், இருளையே ஒளியாக மாற்றக்கூடியப் போதனைகள் மண்ணோடு மண்ணாகப்புதைக்கப்பட்டிருக்கிறது. காரணம், கருத்துக்களைப்பார்க்காமல், யாரிடமிருந்து அந்த கருத்து வருகிறது? என்று ஒருவிதமான இறுகிய உள்ளத்தோடு இருக்கக்கூடிய நிலைமை. உண்மையை அறிய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், பகைமையையும், வெறுப்பையும் மட்டுமே அளவுகோலாகப் பார்க்கும் மனநிலை.

இயேசுவின் போதனை படிக்காத பாமரர்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏழைகளுக்கும் அடிமைப்படுத்தப்பட்டு நொறுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலையைப்பெற்றுத் தருவதாகவும், வாழ்வின் அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கு உதவியது. ஆனால், படித்தவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. செய்தியை உள்வாங்காமல், இறுகிய மனத்தோடு அவர்கள் இருந்ததே காரணம். அவர்கள் இயேசுவின் கருத்துக்களையோ, அதில் பொதிந்திருக்கின்ற உண்மையையோப் பார்க்கவில்லை. இயேசுவின் கருத்துக்கள் தங்களின் வாழ்விலும் ஒளியேற்றும் என்றும் அவர்கள் பார்க்கவில்லை. அவர்கள் இயேசுவை மட்டுமே பார்த்தனர். அதுவும் அவரை விரோதியாக மட்டுமே பார்த்தனர். அதுதான் உண்மையை அறிந்துகொள்ள அவர்களுக்குத்தடையாக இருந்தது.

கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்வோம். தீய சிந்தனைகளை புறந்தள்ளுவோம். அப்போது இந்த சமுதாயம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும். எல்லாக்கருத்துக்களையும் வரவேற்போம். மதிப்பளிப்போம். ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.