நல்ல சிந்தனைகள்

வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற நிலம். நிலம் பலனைக் கொடுக்க வேண்டும் என்று தான், நாம் எதிர்பார்ப்போம். அதேபோல, கடவுளும் நம்மிடமிருந்து பலனை எதிர்பார்க்கிறார். இந்த நிலத்தில் பலர் வந்து, தங்களது கருத்துக்களை, சிந்தனைகளை நாம் வாழக்கூடிய சமுதாயத்திலிருந்து விதைக்கிறார்கள். அந்த சிந்தனைகள் நல்ல சிந்தனைகளாகவும் இருக்கலாம். கெட்ட சிந்தனைகளாகவும் இருக்கலாம். ஆனால், இரண்டுபட்ட சிந்தனைகளும் நமது உள்ளத்தில் விதைக்கப்படுகிறது.

நமக்குள்ளாக விதைக்கப்படுகிற விதைகளில், களைகளும் காணப்படுகின்றன. அந்த களைகளை நாம் அடையாளம் கண்டுகொண்டு, அவற்றை கவனமாகப் பிடுங்கி எறிய வேண்டும். நமக்குள்ளாக விதைக்கப்படுகிற விதைகளை நாம் வடிகட்ட வேண்டும். நல்ல சிந்தனைகளையும், கெட்ட சிந்தனைகளையும் தரம் பிரிக்க வேண்டும். நல்ல சிந்தனைகளை நமது உள்ளத்தில் இன்னும் ஆழமாக வேரூன்றும் வண்ணம், தொடர்ந்து சிந்தித்து தெளிவு பெற வேண்டும். கெட்ட சிந்தனைகளை நம்முடைய சிந்தனைகளின் நினைவிலிருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டும்.

வாழ்வின் வெற்றி பெறுவதற்கான வழி, நமது சிந்தனைகளை நாம் காவல் காப்பதுதான். நல்ல சிந்தனைகள் என்றால், அவற்றை நாம் அனுமதிக்க வேண்டும். கெட்ட சிந்தனைகள் என்றால், நாம் தூக்கி எறிய வேண்டும். நல்ல சிந்தனைகளைக் கொண்டு, வாழ்வில் வெற்றி பெற, உறுதி எடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.