நல்ல மனிதர்களாக வாழ்வோம்

ஆணவம், அகங்காரம், செருக்கு போன்றவை ஒரு மனிதனை மோசமான நிலைக்குத் தள்ளுகிறது. மனித உணர்வுகளை அகற்றி, அவனுள் மிருக எண்ணங்களை உருவாக்குகிறது. அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் ஏரோதியாள். மேலே சொன்ன தீய எண்ணங்கள், சிந்தனைகள் ஒரு மனிதனை எந்த அளவுக்கு, கீழ்த்தரமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை, இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

வழக்கமாக, இறப்பு என்றாலோ, கொலை என்றாலோ, குழந்தைகளை, பிள்ளைகளை அருகில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் பயந்து விடக்கூடாது, அவர்களுக்கு ஒரு தீங்கும் வரக்கூடாது என்கிற எண்ணம் தான் இதற்கு காரணம். இங்கு, சொந்த தாயே தனது மகளை, ஒரு கொலை நடப்பதற்கு காரணமாகிறாள். தன்னுடைய சொந்த மகளை, தன்னுடைய பழிவாங்கும் குரூர புத்திக்கு உபயோகப்படுத்துகிறாள். இதனால், தனது மகளின் மனநிலை பாதிக்கப்படுமே, அவளது வாழ்க்கை வீணாகிப்போய் விடுமே என்று அவள் சிறிதும் கவலைகொள்ளவில்லை. காரணம், அவளது நினைவுகள் முழுவதும், பழிவாங்கும் வேட்கையில் ஊறிப்போய் இருக்கிறது. அவளது சிந்தனைகளை, பழியுணர்வு வெறிபிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது. திருமுழுக்கு யோவானுடைய தலை கொண்டு வந்தபிறகு, அவளது கோபம் தணிகிறது. எதையோ சாதித்து விட்டோம் என்கிற உணர்வு அவளை, ஆட்டிப்படைக்கிறது. ஆனால், நிச்சயம், திருமுழுக்கு யோவானின் தலை கொடுக்கப்பட்ட பிறகு, அவரது உணர்வு எப்படி இருந்திருக்கும்? அந்த தலை தன்னிடம் கொடுக்கப்பட்டதில், அவளுக்கு என்ன நிறைவு இருந்திருக்கும்? ஒன்றுமில்லாத இதற்கா, நான் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டேன் என்கிற குற்ற உணர்வு தான், அவளுக்குள்ளாக நிச்சயம் மேலோங்கியிருக்கும்.

நாமும் கூட, கோபத்தை வரவழைக்கக்கூடிய நேரத்தில், நமது மனித உணர்வுகளை இழந்து, மிருக உணர்வுகளுக்குள்ளாகச் சென்றுவிடுகிறோம். என்ன செய்கிறோம்? என்பதை, அறியாமலேயே பல தவறுகளைச் செய்துவிடுகிறோம். அதற்கு பிறகு மனம் வருந்துகிறோம். இந்த கோப உணர்வுகளுக்கு இடங்கொடுக்காமல் நல்ல மனிதா்களாக வாழ முயற்சி எடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.