நிம்மதி தருபவர் இயேசு கிறிஸ்து

தங்கள் வயிற்றுக்காக உணவைத் தேடி அலைகிற மக்கள்கூட்டத்தைப் பார்த்து, இயேசு பரிதாபப்படுகிறார். அவர்கள் பசியால் இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக, தன்னுடைய புதுமையின் பொருளை அறிந்து கொள்ளாமல், வெறுமனே பசியாற்றுவதற்காக தன்னைத் தேடி வருகிறார்களே? என்கிற வேதனைதான். இயேசுவின் நோக்கம் உடற்பசியை ஆற்றுவது மட்டுமல்ல, மக்களின் ஆன்மீகப்பசியை போக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆன்மீகப்பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும் தான், தணிக்க முடியும். அதனை அறிந்துகொள்ளாம் மக்கள் இருக்கிறார்களே? என்பதுதான் இயேசுவின் வேதனைக்கான காரணம்.

ஆன்மீகப்பசியைப் போக்கும் அருமருந்து இயேசு. ஏன்? கடவுள், இயேசுவில் தான், தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். முற்காலத்தில் முத்திரை என்பது அதிக சக்தி வாய்ந்தது. அது கையொப்பம் போன்றது அல்ல. அதனைவிட வலிமை வாய்ந்தது. அரசியல் உலகிலும், வியாபார உடன்பாட்டிலும் முத்திரை தான், ஒரு ஆவணத்தை சட்டப்பூர்வமாக்கியது. இந்த முத்திரை தான், உயிலை அதிகாரப்பூர்வமாக்கியது. அதுபோல இயேசு கடவுளின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய அதிகாரப்பூர்வமான முத்திரையாக இருக்கிறார். இதுவரை எத்தனையோ பேர் கடவுளின் அன்பைப்பற்றி எடுத்துரைத்திருக்கலாம். ஆனால், இயேசு தான் உண்மையிலேயே கடவுளின் அன்பை நமக்கு உறுதியான வகையில் எடுத்துரைத்தவர்.

வேகமாகச் செல்லும் இந்த உலகத்தில், மனிதன் நிம்மதியின்றி அலைந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். நமக்கு நிம்மதியைத்தருவது ஆன்மீகம் தான். அந்த ஆன்மீகத்தின் நிறைவு நம் ஆண்டவர், நமக்கு மீட்பைப் பெற்றுத்தந்த இயேசு கிறிஸ்து. அவரிடத்தில் முழுமையாக நம்மையே கையளிப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.