நிறைவோடு வாழ குறைகளைக் களைவோம்

கற்றுக்கொள்வதை வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற ஆர்வத்தைவிட, கற்றுக்கொள்வதை பல இடங்களில் சொல்லி பாராட்டு பெற வேண்டும் என்பதுதான், கற்றுக்கொள்கிறவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. பலவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம். பல கருத்துக்கள் நமது மனதுக்கு இதமாக இருக்கிறது. கருத்துக்களின் பொருளை நாம் வியந்து பார்க்கிறோம். ஆனால், அதனை வாழ்வாக்குவதற்கு எடுக்கிற முயற்சியைவிட, அதனை வெறுமனே பயன்படுத்த மட்டுமே நினைக்கிறோம். உலகத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் பலவற்றிற்கு இதுதான் காரணம்.

இன்றைய நற்செய்தி வாசகம், எப்படி நாம் கற்றுக்கொள்வதை வாழ்ந்தால், சிறப்பாக மகிழ்ச்சியாக நாமும் வாழ முடியும், மற்றவர்களையும் வாழ வைக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இன்றைக்கு வெறுமனே மற்றவர்களை குறைகூருவதும், தாங்கள் தான் நேர்மையாளர்கள் என்று காட்டிக்கொள்வதும், இத்தகைய பகட்டால் வரக்கூடிய நோயாக இருக்கிறது. ஒருவேளை, நாம் கற்றுக்கொள்வதை நமது வாழ்வில் வாழாவிட்டாலும், வாழ முயற்சியாவது எடுத்தால், நிச்சயம் நாம் மற்றவர்களைப் பற்றியோ, அவர்களின் குறைகளைப் பற்றியோ தவறாக பேச மாட்டோம். நமது நிறைவில் நாம் எப்போதும் குறைகாண மாட்டோம். நமது குறைவில் தான், மற்றவர்களிடம் குறைகளைக் காண்போம். நாம் எந்தளவுக்கு நிறைவோடு இருக்கிறோம் என்பதை, நாம் எந்தளவுக்கு மற்றவர்களிடத்தில் குறைகாண்கிறோம் என்பதில் இருக்கிறது.

நிறைவோடு வாழ்வதற்கு முயற்சி எடுப்போம். அடுத்தவரில் உள்ள குறைகளைக் காணாது, நம்மிடத்தில் உள்ள குறைகளை நாம் சீர்தூக்கிப் பார்ப்போம். அதுதான் நமது வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும். எப்போதுமே நம்மை நாம், மற்றவர்களைப் பார்க்க விரும்புகிற தராசில் வைக்கிறபோது, நிச்சயம் நமது வாழ்க்கை அடுத்த தளத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.