நிலைவாழ்விற்கான போதனை

நிலையான வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்பது தான் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி. இயேசு அதற்கு எளிதான பதிலைத் தருகிறார். திருச்சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ, அதனைச் செய், நீ நிலையான வாழ்வை பெற்றுக்கொள்வாய் என்று சொல்கிறார். இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மக்களின் நோக்கமும், குறிக்கோளும் நிலையான வாழ்வை அடைவதுதான் அதனை அடைவதற்காகத்தான் நாம் பல வழிகளில் முயன்று கொண்டிருக்கிறோம். அதைத்தான், திருச்சட்ட அறிஞரின் கேள்வியும் நமக்கு எடுத்துரைக்கிறது.

இந்த கேள்வியை திருச்சட்ட அறிஞர் எதற்காக கேட்டார்? அவர் இந்த கேள்வியை கேட்கலாமா? ஏனென்றால், அவர் கடவுளின் சட்டத்தை அல்லும் பகலும் தியானிக்கக்கூடியவர். அதனை மக்களுக்குப் போதிக்கக்கூடியவர். இப்படி கடவுளின் வார்த்தையைப் போதிக்கக்கூடிய திருச்சட்ட அறிஞரே, நிலைவாழ்விற்கான வழியைத் தெரியாமல் இருந்தால், அவர் எப்படி மக்களுக்குப் போதிக்க முடியும்? இன்றைக்கு போதனை என்பது அடுத்தவர்க்கு மட்டும் தான், எனக்கு இல்லை என்கிற மனநிலையை இது எடுத்துக்காட்டுகிறது. இன்றைய நாளிலே, சிறந்த போதனையாளர்கள் நம் நடுவில் இருக்கிறார்கள். கடவுளின் வார்த்தையை சிறப்பாகப் போதிக்கிறார்கள். ஆணித்தரமாக போதிக்கிறார்கள். ஆனால், அவர்களது வாழ்க்கையில் அந்த நம்பிக்கை இருக்கிறதா? அவர்களது வாழ்க்கை அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறதா என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறி. இந்த நிலைமை அகல வேண்டும் என்பதைத்தான், இயேசுவின் போதனை நமக்கு வெளிப்படுத்துகிறது.

நமது வாழ்வில் வெறுமனே போதனையோடு நின்றுவிடாமல், அந்த இறைவார்த்தையை நம்பக்கூடியவர்களாக வாழ்வோம். நாம் நம்புவதை, நம்ப முயல்வதைப் போதிப்போம். அதுதான், நமது வாழ்விற்கு நாம் செய்யக்கூடிய உண்மையான அர்ப்பணமாக இருக்க முடியும். அல்லது நம்மையும் நாம் ஏமாற்றி, அடுத்தவரையும் ஏமாற்றக்கூடியவர்களாகத்தான் நாம் இருப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.