நீங்களே வழக்கைத் தீர்த்துக்கொள்ளுங்கள் !

இயேசு மக்கள் கூட்டத்துக்கு வழங்கிய அறிவுரைகளில் ஒன்று நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் என்பது. இயேசுவின் இந்த வாக்கு எத்துணை ஞானம் நிறைந்தது, இந்த நூற்றாண்டுக்கும் எத்துணை பொருத்தமானது என்பதை எண்ணி, எண்ணி வியக்கிறோம். இன்றைய நாள்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. குடும்ப நீதிமன்றங்களில் மணமுறிவுக்கான வழக்குகள் குவிகின்றன. சொத்துச் சண்டை, பாகப் பிரிவினை என்பது தனி நபர்களுக்குள் மட்டுமல்ல, மாநிலங்களுக்கிடையேகூட உருவாகி, மாநிலங்களும் வழக்கு தொடுக்கின்ற காட்சிகளை இன்று காண்கிறோம்.

நீதிமன்றங்களுக்குச் செல்வதால் பண விரயம், கால விரயம், மன உளைச்சல், தொடரும் பகை உணர்வு முதலியனதான் ஏற்படுகின்றனவே ஒழிய, நேர்மையான, அனைவருக்கும் ஏற்புடைய தீர்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே, இயேசுவின் அறிவுரை முன் எப்போதையும்விட இக்காலத்துக்கு இன்னும் நன்றாகப் பொருந்துகிறது. வழக்கு மன்றங்களுக்குச் செல்வதற்கு முன் உரையாடல் வழி சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள முடியுமா என்று முயற்சி செய்ய வேண்டும். இயேசுவின் சொற்களைக் கவனிப்போம்: வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அமைதியை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கவர்;களின் துணையோடு இந்த முயற்சிகள் வெற்றி பெறும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்குமே! நமது அலுவலகங்களிலும் சிக்கல்களை மேலிடத்துக்கு எடுத்துச்n செல்லும் முன் நாமே அவற்றைத் தீர்க்க முடியுமா என்று முயற்சி செய்வோமா?

மன்றாடுவோம்: ஞானம் நிறை நாயகனே இயேசுவே, நீர் தந்த இந்த ஞானம் நிறை வார்த்தைகளுக்காக உம்மைப் போற்றுகிறோம். எங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை, சிக்கல்களை உரையாடல் மூலமே தீர்த்துக்கொள்ள எங்களுக்கு ஞானமும், நல்லறிவும் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.