நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்

திருப்பாடல் 34: 3 – 4, 5 – 6, 15 – 16, 17 – 18
நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலுமிருந்து விடுவிக்கின்றார் என்று ஆசிரியம் பாடுகிறார். நீதிமான் யார்? என்ற அடிப்படை கேள்வி நம் நடுவில் எழுகிறது. எசேக்கியேல் 18: 9 இதற்கான விளக்கத்தைத் தருகிறது, ”என் நியமங்களையும், நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகொண்டால், அவன் நீதிமான் ஆவான்”. கடவுளுடைய நியமங்களையும், கடவுள் வகுத்து தந்திருக்கிற நீதி நெறிகளையும் கடைப்பிடிக்கிறவன் தான் நீதிமான். நாம் கடவுள் நமக்கு வகுத்து தந்திருக்கிற நெறிகளுக்கு ஏற்ப நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், நாம் நீதிமான்களாக வாழ ஆரம்பிக்கிறோம்.

நீதிமான்களுக்கு கடவுள் தரும் சிறப்பு என்ன? அனைத்துத் துன்பங்களிலுமிருந்து அவர்களை விடுவிக்கின்றார். கடவுள் துன்பங்களே கிடையாது என்று சொல்லவில்லை. மாறாக, துன்பங்கள் வருகிறபோது, அவர்களுக்கு விடுதலை தருவேன் என்கிறார். அப்படியென்றால், நீதிமான்களுக்கு துன்பங்கள் வருமா? நிச்சயம். நாம் கடவுள் வகுத்திருக்கிற நியமங்களின்படி வாழ்கிறபோது, நிச்சயம் நம் வாழ்க்கையில் பல துன்பங்களை நாம் சந்திக்க நேரிடும். அந்த துன்பங்களை நினைத்துப் பார்த்து நாம் கவலை கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால், கடவுள் நம் பக்கம் இருக்கிறார். அவர் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார். அவர் நம்மை விடுவிப்பார்.

நமது வாழ்க்கையில் நீதிமானாக வாழ்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். அப்படி வாழ முற்படுகிறபோது, நமக்கு வரும் துன்பங்களை எண்ணிப்பார்த்து கவலை கொள்ளாமல், மகிழ்வோடு வாழும் வரம் வேண்டுவோம். ஏனென்றால், கடவுள் நம்மோடு இருக்கிறார். நம்மோடு கடவுள் இருக்கிறபோது, நமக்கு எந்த துன்பமும் நேர்வது கிடையாது.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.