நீரூற்று தரும் புதிய வாழ்வு

எசேக்கியேல் 47: 1 – 2, 8 – 9, 12
நீரூற்று தரும் புதிய வாழ்வு

இறைவாக்கினர் எசேக்கியேலோடு கடவுள் பேசுகிறபோதெல்லாம், காட்சியை அவருக்கு வெளிப்படுத்துகிறார். காட்சிகள் வழியாக, கடவுள் சொல்ல வந்த செய்தியை சொல்கிறார். எசேக்கியேலும் அதனைப் புரிந்து கொண்டு, வெளிப்படுத்துகிறார். எசேக்கியேல் புத்தகத்தின் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் நாம் வாசிக்கிறபோது, ஆங்காங்கே காணப்படுகிற இந்த காட்சிகளையும், அதன் அர்த்தத்தையும் தொடர்ச்சியாக பார்த்து அறியலாம். இந்த காட்சியில் “தண்ணீர்“ முக்கியத்துவம் பெறுவதை நாம் பார்க்கலாம். விவிலியத்தில், “தண்ணீர்“ அருமையான பல அர்த்தங்களை வெளிப்படுத்துகிற வார்த்தை. அதில் இரண்டு அர்த்தங்களைப் பொருத்திப் பார்ப்பது சாலச்சிறந்தது.

விவிலியத்தில் முதலாவதாக, தண்ணீர் என்கிற வார்த்தை, வாழ்விற்கு சவாலானதாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக, கடல். கடலில் எழுகிற அலைகள் வாழ்வின் துன்பங்களுக்கு உருவகமாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், கடவுள் அதன் மீது தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்தியிருக்கிறார். எனவே தான், இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று வந்தபோது, கடவுளின் வல்லமையால், கடல் இரண்டாகப் பிளந்து அவர்களுக்கு வழிவிட்டது. எனவே தான், திருவெளிப்பாடு (21: 1) நூலில், கடவுளின் புதிய அரசில், கடல் இடம்பெற்றிருக்காது என்று சொல்லப்படுகிறது. இரண்டாவதாக, தண்ணீர் வாழ்வின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. வாழ்விற்கான அடிப்படையே தண்ணீர் தான். எனவே தான், தொடக்க காலங்களில், வாழ்வை அள்ளி வழங்கும் ஆற்றுப்பகுதிகளில் திருமுழக்குக் கொடுக்கப்பட்டது. இன்றைய வாசகம், இஸ்ரயேல் மக்கள் புதிய வாழ்வு பெற இருக்கிறார்கள் என்பதையும், இனிமேல் அவர்கள் வாழ்க்கையில் எத்தகைய துன்பமோ, சவால்களோ நிச்சயமாக இருக்காது என்பதையும் நமக்கு உவமையாக உணர்த்துகிறது.

இறைவன் நம்மோடு பேசும் வார்த்தைகள் அனைத்துமே, நமக்கு வாழ்வு தரக்கூடியவையே. குறிப்பாக, இறைவார்த்தை. நம் வாழ்வில் சந்திக்கும் எல்லாவித சோதனைகளுக்கும் அது அருமருந்தாக, அதனை எதிர்த்து நிற்பதற்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. அந்த இறைவார்த்தை என்னும் நீருற்றில் நாம் பருகுவோம். இறைவல்லமையால் நாம் என்றும், அவருடைய பிள்ளைகளாக இருப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.