நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்

திருப்பாடல் 68: 1 – 2, 3 – 4, 5 – 6

நேர்மையாளர்கள் யார்? அவர்கள் ஏன் மகிழ்ச்சியடைவார்கள்? நேர்மையாளர்கள் என்பவர்கள், கடவுளின் சட்ட திட்டங்களுக்கு தங்களையோ முழுமையாக ஒப்புக்கொடுத்து மன்றாடுகிறவர்கள். கீழ்ப்படிதலோடு வாழ்கிறவர்கள். தங்கள் மனச்சான்றுக்கு பயந்து வாழக்கூடியவர்கள். சுயநலத்தோடு எல்லாவற்றையும் அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். அவர்கள் எப்போதும் கடவுளுக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறவர்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆசிரியர் சொல்கிறார்.

இந்த உலக வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்க்கிறபோது, மேலே சொல்லப்பட்டிருக்கிற விழுமியங்களோடு ஒரு மனிதர் வாழ்ந்தால், அவர் நிச்சயம் கவலைகொள்வதற்குத்தான் அதிகமான காரணங்கள் நமக்குக் கிடைக்கிறது. பின்னர் எப்படி நோ்மையாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்? அநீதி இந்த உலகத்தில் இருந்தாலும், அதற்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு அநீதி செய்கிறவர்களால், தொடர்ந்து அநீதியோடு வாழ முடியாது. அவர்களுக்கும் ஒரு முடிவு வரும். அதுதான் இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது. அநீதி செய்கிறவர்கள் காற்றால் அடித்துச்செல்லும் புகையைப்போல அடித்துச்செல்லப்படுவார்கள். நெருப்பு முன்னால் எரியும் மெழுகு போல, அவர்களும் கரைந்துபோவார்கள். நிச்சயமாக இது நேர்மையாளர்களுக்கும், கடவுளுக்கு பயந்து வாழ்கிறவர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

நாம் நேர்மையாளர்களாக வாழ்வதில் கவலையோ, வருத்தமோ கொள்ளக்கூடாது. நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கடவுள் நம்மை எப்போதும் கவலை கொள்ள விட மாட்டார். நம்மை தனித்து விட மாட்டார். அவர் எப்போதும் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார். நேர்மையாளர்களாக வாழ்வதில் பெருமை கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.