நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூறுங்கள்

திருப்பாடல் 97: 1, 2ab, 5 – 6, 10, 11 – 12

பூமியில் இருக்கிறவர்களை மகிழ்ச்சியாக இருக்குமாறு திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் தொடர்ந்து சொல்கிறார். கடவுள் ஆட்சி செய்வதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கிறது. கடவுளின் ஆட்சியில் யார் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? என்பதையும் அவர் சொல்கிறார்.

கடவுளின் ஆட்சியில் நேர்மையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஏனென்றால், கடவுள் நேர்மையாளர். அவர் நேர்மையுடன் ஆட்சி செய்கின்றார். அவர் நேர்மையாளர்களை விரும்புகிறார். அவர்களைப் பாதுகாக்கின்றார். நேர்மையாளர்கள் யார்? மக்களுக்காக வாழ்கிறவர்கள். நீதியோடு நடக்கிறவர்கள். அநீதியை எதிர்க்கிறவர்கள். அதன்பொருட்டு எத்தகைய துன்பம் வந்தாலும், அதனைத் தாங்குவதற்கு வல்லமை படைத்தவர்கள். தாங்கள் வாழ்கிற வாழ்க்கையின் பொருட்டு, பலவற்றை இழந்தவர்கள். மற்றவர்களால் பழிவாங்கப்படுகிறவர்கள். மற்றவர்களால் உதாசீனமாக நடத்தப்படுகிறவர்கள். இவர்களை கடவுள் விரும்புகிறார்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்போதும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால், ஒரு சில மதிப்பீடுகளோடு சமரசம் செய்து கொள்கிறோம். கடவுளின் பிள்ளைகளாக வாழ வரம் வேண்டி, மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.