நேர்மை என்னும் கொடை

யூதர்களுக்கு தங்களது மீட்பில் எப்போதுமே சந்தேகம் வந்தது கிடையாது. யூதராகப் பிறப்பதே, மீட்பைப் பெற்றுவிட்டதற்கான பொருளாக அவர்கள் நினைத்தனர். அவர்களைப்பொறுத்தவரையில், கடவுளின் நீதித்தீர்ப்பு வருகிறபோது, யூதர்களை ஒரு அளவையிலும், மற்ற நாட்டினரை வேறொரு அளவையிலும் நிறுத்துவார் என்று அவர்கள் முழுமையாக நம்பினர். ஆபிரகாமின் பிள்ளைகள் நீதித்தீர்ப்பிலிருந்து விலக்கு பெறுவார்கள் என்று நினைத்தனர். ஆனால், திருமுழுக்கு யோவான் அவர்களின் நம்பிக்கை தவறு என்று சுட்டிக்காட்டுகிறார்.

கடவுளின் நீதித்தீர்ப்பைக்கான அளவையும், திருமுழுக்கு யோவான் சொல்கிறார். மக்கள் தங்களிடம் இருப்பதை முதலாவதாக பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். ஒருவர் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பதையும், மற்றொருவர் ஒன்றும் இல்லாமல் இருப்பதையும் கடவுள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதை அவர் உறுதியாகத் தெரிவிக்கிறார். பகிர்தலுக்கு அடித்தளமாக, அவரவர் பணியை, அவரவர் திறம்படச் செய்ய வேண்டும் என்று, அவர் போதிக்கிறார். எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல, செய்யும் தொழிலில் நேர்மையாக, உண்மையாக, கடவுளுக்குப் பயந்து, மற்றவர்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் செய்ய வேண்டும் என்பதே, அவரது போதனையின் சாராம்சம்.

இன்றைக்கு ஒரு சில வேளைகளில், நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், நாம் செய்யும் தொழிலில்பொருட்டு, சில சமயங்களில் நமக்கு மேலுள்ள அதிகாரிகளால் பொய் சொல்வதற்கு தள்ளப்படுகிறோம். எந்த அளவுக்கு, நாம் நேர்மையாக இருக்க முடியுமோ, அந்த அளவுக்கு நமக்கும், நமது பிற்கால் வாழ்க்கைக்கும் நல்லது.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.