பகிர்ந்து வாழ்வோம்

”இருப்பதிலிருந்து தான், நாம் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்”. இதனை கிராமப்புறங்களில், ”சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்” என்று, நாட்டுப்புற வழக்கில் கூறுவார்கள். இன்றைய நற்செய்தியும், ”உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்” என்று, இதனை அடியொற்றி சொல்கிறது. நாம் அனைவருமே மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகப் பிறந்தவர்கள். இயற்கை அன்னையைப் பார்த்தால் அந்த உண்மை நமக்குத் தெரியவரும். அருவி, மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்துமே மற்றவருக்குக் கொடுப்பத்தில் நிறைவைப் பெறுகிறது. எந்த மரமும் அதன் கனியை, தானே உண்பதில்லை. பறவைகளும், விலங்குகளும் மனிதர்களும் பயன்பெறுவதற்காகவே அதைக் கொடுக்கிறது.

மனிதர்களும் இயற்கை அன்னையின் பிள்ளைகள் தான். அவர்களும் அன்னையைப்போல தங்களின் வாழ்வில் மற்றவர்களுக்குக் கொடுத்து, அதில் நிறைவைக்காண அழைக்கப்படுகிறார்கள். எனவே, நாமும் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகவே, கொடுத்து வாழ்வதற்காகவே அழைக்கப்படுகிறோம். இன்றை நற்செய்தியும் இதனைத்தான் வேறுவார்த்தைகளில் சொல்கிறது. நாம் கொடுப்பது முதன்மையான காரியம். நாம் கொடுப்பது நல்லதாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும். எத்தனையோ மரங்கள் எதையெல்லாம் கொடுத்தாலும், நமக்குப் பயன்படக்கூடியதை மட்டும்தான், நாம் சாப்பிடுகிறோம். அதே போல நாம் கொடுப்பது, மற்றவர்களுக்கு நிறைவைத்தரக்கூடியதாக அமைய வேண்டும்.

கடவுளின் அருளையும், ஆசிரையும் பெற்றுக்கொள்வதற்காகவும், பெற்றுக்கொண்டதை பகிர்ந்து கொள்வதற்காகவுமே ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைக்கப்படுகிறார். இலவசமாகப் பெற்றுக்கொண்டதை, இலவசமாகவேக் கொடுத்த திருத்தூதர்களைப் பின்பற்றி, நாமும் பெற்றுக்கொண்ட கொடைகளை மற்றவர்கள் பயன்பெற நாம் வாழ்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.