பகிர்வே உயிப்பின் நம்பிக்கை வெளிப்பாடு!

உயிர்த்த இயேசு பன்னிருவருக்கும் தோன்றி, அவர்களை உறுதிப்படுத்தியதையும், அவர்களுக்குப் பாவ மன்னிப்புக்கான அதிகாரத்தை வழங்குவதையும் இன்றைய நற்செய்தி வாசகம் விளக்குகிறது. இன்றைய முதல் வாசகம் நம்பிக்கை கொண்ட தொடக்க காலத் திருச்சபையினரின் வாழ்க்கை முறையைப் பற்றிப் பார்க்கிறோம்.

தொடக்க காலத் திருச்சபை மிகவும் ஆற்றலுடன் வளர்ச்சி அடைந்தது, பெருகிப் பலுகியது. அனைவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றுகளாக விளங்கினர். சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார், தங்களோடு வாழ்கின்றார் என்பதனை அனைவரும் நம்பினர். அவ்வாறு நம்புவதற்கு சீடர்களின் வாழ்வு மிகப்பெரிய ஓர் ஆற்றலாக, ஆதாரமாக விளங்கியது.

நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறையைத் திருத்தூதர் பணிகள் நூல் இவ்வாறு சுருங்கத் தருகிறது:

1. அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாக இருந்தனர். (நம்பிக்கை)

2. அவர்களது உடமைகள் அனைத்தும் பொதுவாக இருந்தன. (பிறரன்பு)

அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாக இருந்தது அவர்களின் இறைநம்பிக்கையைக் குறிக்கிறது. அவர்களிடத்தில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. எந்தவித பேதங்களும் இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இது பிறரின் கவனத்தை ஈர்த்தது.

இரண்டாவதாக, கிறித்தவர்கள் தன்னலம் துறந்து, பகிர்ந்து வாழ முன்வந்தனர். இதுவும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பகிர்வைவிட மிகச் சிறந்த சான்றைக் காண இயலாது. இதுவே நம்பிக்கை கொண்டோரின் எண்ணிக்கை பெருகியதற்குக் காரணமாக அமைந்தது.

நமது வாழ்விலும் நமது செல்வம், பொருள், திறமைகள், ஆற்றல்கள்… என்னும் கொடைகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள முன்வருவோம்

மன்றாடுவோம்: சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். தொடக்க காலத் திருச்சபையில் இருந்த அதே விசுவாசத்தை, இறைநம்பிக்கையை எங்களில் உருவாக்கும். பகிர்ந்து வாழும் தாராள உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும். உமது ஆவியினால் எங்களை நிரப்பியருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

– பணி குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.