பக்தி வைராக்கியம் காத்திடுவோம்

கடவுளின் இறைமக்களே! பிரியமானவர்களே!! நம்முடைய பக்தி ஆதாயம் தருவதுதான். அது யாருக்கென்றால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும். உலகத்தில் நாம் எதையும் கொண்டுவந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. இதை யாவரும் அறிந்ததே. உண்ண உணவும், உடுக்க உடையும் இருந்தால் அவற்றில் மனநிறைவு கொள்வோம். அதிகமான செல்வம் சேர்ப்பதற்காய் பலர் பக்தியை விட்டு பின்வாங்கி தகாத  காரியங்களில் ஈடுபடுவதை காண்கிறோம்.கடவுளின்  பிள்ளைகளாகிய நாம் பொருள் ஆசையை விட்டு
விடுவோம். ஏனெனில் பொருள் ஆசையே எல்லா தீமைகளுக்கும் காரணமாகவும், ஆணிவேராகவும் இருக்கிறது. இதைத்தான் நாம் 1 திமொத்தேயு 6: 6,7,10 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம்.
அன்பார்ந்தவர்களே நாம் வீணான ஆசையில் இருந்து தப்பி நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடுவோம். விசுவாச வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை எதிர்க்கொண்டு கடவுளின் பேரில் இன்னும் அதிகமான நம்பிக்கைவைத்து
நிலையான வாழ்வை பற்றிக்கொள்வோம். அதற்காகவே கடவுள் நம்மை அழைத்து அறிந்திருக்கிறார். இனி வாழ்வது நாம் அல்ல, கிறிஸ்துவே நம்மில் வாழட்டும். அவர்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் வாழுவோம். கலாத்தியர் 2:20 .
ஆபிரகாம் கடவுள் பேரில் வைத்த பக்தியினாலும், நம்பிக்கையினாலும் கடவுளின் நண்பனாகவும், தீர்க்கதரிசியாகவும் வாழ்ந்தது போல நாமும் நம் வாழ்க்கையை ஆண்டவரின் பாதத்தில் வைத்து அவருடைய திருவுளப்படி நடந்து அவரின் நம்பிக்கைக்குரிய பிள்ளைகளாய் மாறுவோம். நாம் நம்முடைய பழைய வாழ்க்கையை மறந்துவிட்டு கடவுளின் கரத்தில் நமக்காக உள்ள பரிசை பெற்றிட நாம் நம் இலக்கை நோக்கி ஓடுவோம். பிலிப்பியர் 3 :13-14 .
தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டை காத்து ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறவாமல் காத்துகொள்ளுவோம். உடலும் ஒன்றே, தூய ஆவியும் ஒன்றே, அவ்வாறே ஆண்டவர் ஒருவரே, நாம் கொண்டுள்ள பக்தி, நம்பிக்கை,
திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் மேலான எல்லார் மூலமாகவும் செயலாற்றி எல்லாருக்குள்ளும் இருப்பவரை இறுதியாக, உறுதியாக பற்றிக்கொள்வோம். எபேசியர் 4:4-6 .
ஜெபம் 
அன்பின் பரம தகப்பனே உம்மை நன்றியோடு துதிக்கிறோம்,வணங்குகிறோம், வாழ்த்துகிறோம், போற்றுகிறோம். நீர் இந்த உலகத்தை விட்டு கடந்து சென்று உமது தூய ஆவியால் எங்களை ஆட்கொண்டு ஒவ்வொரு இதயத்திலும் வாழ்ந்துகொண்டு செயல்லாற்றும் தூயஆவியானவரே பரிசுத்தரே, உமக்கு கோடானகோடி நன்றிபலிகளை ஏறேடுக்கிறோம். எங்கள் உள்ளத்தில் இருந்து எங்களுக்கு போதித்து  நாங்கள் நடக்க வேண்டிய பாதையை அனுதினமும் கற்றுத்தந்து
எங்கள் பக்தியில் இன்னும் உமதண்டையில் வர உதவி செய்யும். உம்மோடு கலந்து கரைந்து வாழ எங்களை வழி நடத்தும். உமக்கே  மகிமையும், மாட்சியும் உண்டாகட்டும்.
ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.