பணிவாழ்வு

இன்றைய நற்செய்தியிலே (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6), இயேசு கிறிஸ்து தனது சீடர்களை பணிவாழ்விற்கு தயாரிப்பாக, அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள அனுப்புகிறார். இயேசு அவர்களை அனுப்புகிறபோது, பயணத்திற்காக எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். எதற்காக பயணத்திற்காக எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்று இயேசு சொல்கிறார்? ஒரு வழிப்பயணத்தில் நமக்கு பல தேவைகள் நிச்சயம் இருக்கும். அந்த தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் சென்றால், அந்த பணியை இன்னும் அதிக ஆர்வத்தோடு, நேர்த்தியோடு செய்து முடிக்கலாம். அப்படியிருக்கிறபோது, இயேசு ஏன் பொருள் இல்லாத பயணத்தை ஊக்குவிக்கிறார்.

இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்ல முடியும். முதலாவது, பணிவாழ்வில் தன்னை இணைத்துக்கொள்கிற ஒவ்வொருவரும், கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை வைக்க வேண்டும். செய்வது நாமாக இருந்தாலும், நம் வழியாகச் செய்து முடிப்பவர், தந்தையாகிய கடவுள். நாம் வெறும் ஊழியர்கள். அவ்வளவுதான். நமக்கே கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை இல்லையென்றால், நாம் எதைப்பற்றி மக்களிடையே போதிக்கப்போகிறோம்? நமது அனுபவமே போதனையாக இருக்க வேண்டும். அந்த அனுபவத்தைப்பெறுவதற்காக, அவர்களை வெறுமனே அனுப்புகிறார். இரண்டாவது, நாம் நமது பணிக்காக கொண்டு செல்கிற பொருட்களே, நமது பணியைச் செய்வதற்கு தடையாய் அமைந்து விடுகிறது. நாம் அதைப்பயன்படுத்துவதில் தேங்கிவிடுகிறோம். அதில் ஈர்ப்பு உடையவர்களாக மாறிவிடுகிறோம். எதற்காக வந்தோமோ, அந்த நோக்கத்தை மறந்துவிடுகிறோம். நமது பணிக்கு இடறலாக, சோதனையாக நாம் கொண்டுவந்த பொருட்கள் அமைந்து விடுகிறது. நமது வாழ்வே, நமது போதனைக்கு எதிரியாய் மாறிவிடுகிறது. ஆகவே தான், இயேசு தனது சீடர்களை, போதிக்க அனுப்புகிறபோது, எதையும் தங்களோடு எடுத்துச்செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார்.

போதிக்கக்கூடிய கடமை திருமுழுக்குப் பெற்றிருக்கிற அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிறது. நாம் இருக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நமது போதனை வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும். அப்படி வாழ்கிறபோது, கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை உள்ளவர்களாகவும், பொருட்களின் மீது பற்றற்றவர்களாகவும் வாழ்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.