பலவீனங்களை வெற்றி கொள்வோம்

ஏரோது ஒரு பலவீனமான மனிதன் என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்க முடிகிறது. சாதாரணமாக தான் கொடுத்த ஒரு வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக, உயிராக மதிக்கப்படும் சட்டத்தையே காவு கொடுத்தவர் இந்த ஏரோது. தான் செய்வது மிகப்பெரிய தவறு என்பது, ஏரோது அறியாதது அல்ல. ஆனால், ஏரோதியாவுடனான நெருக்கம், மயக்கம், பயம் அனைத்தும், இந்த தவறை அவர் துணிவோடு செய்வதற்கு உதவி செய்தது. தான் செய்யப்போவது தவறு என்று தெரிந்தும், எதைச்செய்தால் அது சரியாக இருக்கும் என்பதை அறிந்தும், தவறுக்கு துணைபோனால், அதுதான் பலவீனம். ஏரோது இந்த பலவீனத்திற்குச் சொந்தக்காரர்.

ஏரோதியாவுடனான இந்த தவறான உறவு எந்தவிதத்திலும் ஏதோதுவிற்கு நன்மையைத்தரவில்லை. தனது முதல் மனைவியை விலக்கியதால், முதல் மனைவியின் தந்தையான, நாப்தானியர்களின் அரசனான அரேற்றஸ், போரிலே ஏரோதுவைத் தோற்கடித்து தனது கோபத்தைத் தீர்த்துக்கொண்டான். உரோமையர்களின் உதவி இருந்ததால், தனது பதவியை, போரில் தோற்றாலும் தக்கவைத்துக்கொண்டான். கலிகுல்லா உரோமை அரசராகப் பதவியேற்றபோது, ஏரோதியாவின் நச்சரிப்பால், சிறப்புப்பட்டங்கள் பெறுவதற்கு முயற்சி எடுத்தான். இறுதியில் குற்றம்சாட்டப்பட்டு, நாடுகடத்தப்பட்டார். இவ்வாறு ஏரோதியாவின் உறவினால், தனது வாழ்க்கையே நாசமாகிக்கொண்டிருந்தாலும், அதையே அறிந்திருந்தாலும், அதைவிட்டு விலக முடியாமல் வாழ்ந்த ஏரோது உண்மையில் பலவீனமானவன் தான்.

பலவீனம் தவறல்ல. தனது பலவீனம் தெரிந்திருந்தும், அதனால் தனக்கு ஏற்படும் பாதகங்களை அறிந்திருந்தும், அந்த பலவீனத்திலே வீழ்ந்து கிடப்பதுதான் தவறு. நமது வாழ்விலும் நமது பலவீனங்களை அறிந்திருந்தாலும், அதனால் நமக்கு வரும் துன்பங்களைத் தெரிந்திருந்தாலும், அவற்றில் வீழ்ந்து கிடந்தால், நிச்சயம் அது தவிர்க்கப்பட வேண்டும். இயேசுவின் துணைகொண்டு, நமது பலவீனங்களை வெற்றிகொள்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.