பலிப்பொருளாக மாற…….

யூதச்சட்டப்படி எந்தவொரு பொருளும் கடவுளுக்கு காணிக்கையிடப்படுவதற்கு முன்னால் உப்பிடப்பட வேண்டும். லேவியர் 2: 13 சொல்கிறது: “நேர்ச்சையான எந்த உணவுப்படையலும் உப்பிடப்பட வேண்டும். உன் உணவுப்படையலில் கடவுளின் உடன்படிக்கையாகிய உப்பைக்குறையவிடாமல் உன் நேர்ச்சைகள் அனைத்தோடும் உப்பையும் படைப்பாயாக.” இந்த பலி செலுத்தப்படுகிற உப்பு, உடன்படிக்கையின் அடையாளமாகும். ஏனெனில் எண்ணிக்கை 18: 19 ல், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உப்பு உடன்படிக்கையைப்பார்க்கிறோம்: “இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் புனிதப்படையல்கள் அனைத்தையும் நான் உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாகத் தருகிறேன்: இது உனக்கும் உன்னோடிருக்கும் உன்வழி மரபுக்கும் ஆண்டவர் திருமுன் என்றுமுள ‘உப்பு உடன்படிக்கை’ ஆகும். ஆக, படையல்களில் உப்பு சேர்ப்பது ஆண்டவர்க்கு உகந்த பலியாய் இருக்கிறது.

இன்றைய நற்செய்தியிலே இயேசு கூறுகிறார்: “பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்” (மாற்கு 9: 49). இங்கே நெருப்பு என்ற வார்த்தைக்கு தூய ஆவியை நாம் ஒப்பிட்டுப்பேசலாம். திருத்தூதர் பணி இரண்டாம் அதிகாரத்தில் நெருப்பு வடிவத்தில் தூய ஆவி திருத்தூதர்கள் மேல் இறங்கி வந்ததை வாசிக்கிறோம். அதாவது தூய ஆவியானவர் நம் ஒவ்வொருவரையும் தூய்மையாக்கி, நம்மை இறைவனுக்கு ஏற்ற பலிப்பொருளாக மாற்ற உதவிசெய்வார். அதற்கு நம்மையே தூய ஆவியானவர் ஆட்கொள்ள கையளிக்க வேண்டும். ஆண்டவர் இயேசுகிறிஸ்து கெத்சமனி தோட்டத்தில் தன்னையே தூய ஆவியிடம் ஒப்புக்கொடுக்கிறார். அதனால்தான் இயேசுவால் தன்னை இறைவனுக்கு உகந்த பலியாய் ஒப்புக்கொடுத்து, இந்த மனுக்குலத்தையே மீட்க முடிந்தது.

ஒவ்வொருநாளும் திருச்சபை புனிதர்களை நினைவில்கொண்டு சிறப்பாக செபிக்கிறது. இந்தப்புனிதர்கள் தங்களையே தூய ஆவியிடம் கையளித்து, இறைவனுக்கு ஏற்ற பலியாய் மாறினார்கள். நாமும் நம் சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் தூய ஆவியானவரிடத்தில் ஒப்படைப்போம். இறைவனுக்கு ஏற்ற உகந்த பலிப்பொருளாய் மாறுவோம்.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.