பவுலடியாரின் நற்செய்திப் பணி

திருத்தூதர்பணி 22: 30, 23: 6 – 11

சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளும் திறனை பவுல் இன்றைய வாசகத்தில் வெளிப்படுத்துகிறார். ஏதேன்ஸ் நகரத்து மக்கள் பெயர் தெரியாத கடவுளை வணங்குவதை, அவர்களது அறிவு மொழியில் பாராட்டி, இறுதியாக அவர்கள் வணங்குகிற கடவுளைப் பற்றித்தான் அறிவித்துக்கொண்டிருப்பதாக, அறிவாற்றல் கொண்டு விளக்குகிறார். இந்த பகுதியிலும் தன்னுடைய அறிவாற்றலை அவர் வெளிப்படுத்துகிறார். தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு, ஆயிரத்தவர் தலைவர் ஆணைபிறப்பிக்கிறார். பவுல் சிறையிலிருந்து அழைத்துவரப்படுகிறார்.

பவுல் அங்கே கொண்டுவரப்பட்டபோது, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் ஏராளமாக திரண்டிருப்பதைப் பார்க்கிறார். உயிர்ப்பு உண்டென அறிவித்ததால், தான் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கிறார். சிறையில் இருப்பது என்பது, பவுலடியாருக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த நிலையிலும் அவர் துணிவோடு பேசுகிறார். உயிர்ப்பு பற்றிய பவுலடியாரின் பேச்சு அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காரணம் இதுதான்? பரிசேயர்கள் உயிர்ப்பை நம்புகிறவர்கள். சதுசேயர்கள் உயிர்ப்பை நம்பாதவர்கள். இவர்கள் இருவரும் ஒருவர் மற்றவருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். வாக்குவாதம் முற்றவே, பவுலடியாரின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று எண்ணி, அவர் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்படுகிறார். தன்னுடைய அறிவாற்றல் கொண்டு, தன்னை விசாரிக்க அழைத்துவந்த இடத்திலும், நற்செய்தியை தெளிவாக உணர்த்திவிடுகிறார்.

கிடைக்கிற வாய்ப்புக்களை பயன்படுத்தி, நற்செய்தி அறிவிப்பதை தன்னுடைய உயிராகவே கருதி வாழ்ந்தவர் பவுலடியார் என்பதற்கு, இதனை விட வேறு சிறந்த எடுத்துக்காட்டு நாம் பார்த்துவிட முடியாது. அவர் இருந்த சூழ்நிலைகள் நற்செய்தி அறிவிப்பதற்கு நிச்சயம ஏற்றது என்று சொல்ல முடியாது. அவர் குறை சொல்வதற்கு பல காரணங்கள் இருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து இறைவார்த்தையை அறிவித்த பவுலடியாரைப்போல, சூழ்நிலைகளை குறை சொல்லாமல், மகிழ்ச்சியுடன் வாழ பழகிக்கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.