பவுலடியாரும், இயேசுவின் பாடுகளும்

2தீமோத்தேயு 2: 8 – 15

தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், இதுவரை பவுலடியார், துன்பத்தைத் தாங்குவதில் அவர் கொண்டிருந்த தனித்துவத்தைப் பற்றி அறிவுரையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், இரண்டாவது அதிகாரத்தின் தொடக்கத்திலிருந்து, அவருடைய அறிவுரை இயேசுவின் பாடுகளை நோக்கி நகர்கிறது. ”இயேசு உயிர் பெற்று எழுந்தார் என்பதை நினைவில் கொள்” என்று சொல்கிறார். அதாவது, இயேசுவின் பாடுகள் அழுத்தம் பெறுகிறது, அவருடைய துன்பங்கள் அறிவுரையின் மையமாகிறது.

கடவுளுடைய வார்த்தையை யாரும் சிறைப்படுத்த முடியாது. இயேசுவை, அவருடைய சாவு சிறைப்படுத்தி விடும் என்று, பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தப்புக்கணக்கு போட்டார்கள். ஆனால், இயேசு சாவிலிருந்து உயிர் பெற்றெழுந்தார். பவுலடியாருடைய துன்பங்களும், பாடுகளும் யாருக்கும் மீட்பைப் பெற்றுத்தரப் போவதில்லை. ஆனால், அவருடைய வாழ்க்கை பலருக்கு உந்துசக்தியாக இருக்கப்போகிறது. குறிப்பாக, துன்பங்களைத் தாங்குவதற்கு மற்றவர்கள் கற்றுக்கொள்கின்ற வாழ்க்கை அனுபவமாகவும் இருக்கிறது. நாம் கிறிஸ்துவோடு இருக்கிறபோது, துன்பங்களைத் தாங்குவதற்கான வல்லமையைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதுதான் பவுலடியார் இங்கு சொல்ல வருகிற செய்தியாக இருக்கிறது.

துன்பங்களைக் கண்டு எவரும் அஞ்ச வேண்டியதில்லை. ஏனெனில், இயேசுவே அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். அவரே நமக்கு அனுபவமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அந்த இயேசுவோடு உடனிருக்கிறபோது, அவருடைய பாடுகளை எண்ணிச் சிந்தித்துப் பார்க்கிறபோது, நம்முடைய கவலைகள் நமக்கு பெரிதாக தோன்றுவதில்லை. அதனை நம்முடைய வாழ்வின் பாடமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து, இறைவனோடு இணைந்திருப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.