பார்வை எதற்காக?

பார்வையற்ற பர்த்திமேயுக்கு இயேசு பார்வை அளித்த நிகழ்ச்சியை மீண்டும் ஒருமுறை தியானிக்கிறோம். எனவே, இன்று வாசகத்தின் கடைசி வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். உமது நம்பி;க்கை உம்மை நலமாக்கிற்று என்று இயேசு கூறியதும், அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவைப் பின்பற்றினார் என்று வாசிக்கிறோம். பார்வை பெற்ற அம்மனிதர் நமக்குக் கற்றுத்தரும் பாடம் இதுதான்: பார்வை பெறுவது கடவுளைப் புகழ்வதற்காகவும், இயேசுவைப் பின்பற்றுவதற்காகவும்தான் என்பது அவரது அனுபவம். பார்வை பெற்றதும் தனது குடும்பத்தினரைத் தேடிச் செல்லவில்லை, புதிய வாழ்வைத் தொடங்குவதற்கான முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. மாறாக, கடவுளைப் புகழ்ந்தார், இயேசுவைப் பின் தொடர்ந்தார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர். எனவே, ஒரு நற்செய்தியாளராகவும் மாறிவிட்டார்.

நாமும் புதிய பார்வை பெறவேண்டும். நமது வாழ்வின் நோக்கம் கடவுளைப் புகழ்வதும், இயேசுவைப் பின்பற்றி வாழ்வதும்தான் என்பதை உணர்வதே அந்தப் புதிய பார்வை. வேறு எதற்காக இந்த வாழ்வு? வேறு எது நம் வாழ்வுக்குப் பொருள் சேர்க்கும்? வேறு எதுவுமல்ல. இவை மட்டும்தான். எனவே, இறைவனைப் புகழ்வோம். இயேசுவைப் பின்பற்றுவோம். இந்தப் புதிய பார்வையை இயேசுவிடமிருந்து பெறுவோம்.

மன்றாடுவோம்: உலகின் ஒளியான இயேசுவே, பார்வையற்ற மனிதர் மேல் பரிவு கொண்டு அவருக்குப் பார்வை அளித்தீரே. அதே பரிவோடும், இரக்கத்தோடும் எனக்கும் புதிய பார்வையை அருள்வீராக. உமது ஒளியைப் பெற்றுக்கொண்டு, நான் இறைவனைப் போற்றிப் புகழவும், உம்மைப் பின்பற்றவும் வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.