பாவ மன்னிப்பு

இயேசுவின் சீடர்கள் கடைசி இரவு உணவு சாப்பிட்ட அந்த இடத்தில் சீடர்கள் கூடியிருக்கிறார்கள். அவர்கள் கொண்டிருந்த பயத்தைப்பற்றி நாம் விளக்கத்தேவையில்லை. யார் வந்தாலும், தங்களைக்கொல்லத்தான் வருகிறார்களோ என்று எண்ணியவர்களாக, சீடர்கள் கதிகலங்கிப்போய் .இருந்திருப்பார்கள் என்பது நாம் அனைவருமே உணரக்கூடிய ஒன்று. அப்படி பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிற சமயத்தில், இயேசு அவர்கள் நடுவில் தோன்றி, ”உங்களுக்குச் சமாதானம்” என்று சொல்கிறார். இங்கு சமாதானம் என்று சொல்வது, கடவுளின் அனைத்து ஆசீர்வாதங்களும் கிடைக்கும் என்ற பொருளில் அர்த்தப்படுத்தப்படுகிறது.

இயேசு தனது சீடர்களுக்குக் கொடுத்த முக்கியமான கொடை, மற்றவர்களின் பாவங்களை மன்னிப்பது. பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரத்தைக்கொடுக்கிறார். இங்கே, அதிகாரம் என்று சொல்லப்படுவது, சீடர்களுக்கான அதிகாரம் இல்லை. அந்த அதிகாரத்தை அவர்கள் தவறாகப்பயன்படுத்த முடியாது. அவர்கள் நினைத்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியாது. அவர்கள் நினைத்தால் தான், கடவுளின் மன்னிப்பு கிடைக்கும் என்று நாம் அர்த்தம் கொள்ளக்கூடாது. மாறாக, மன்னிப்புப் பெறுகிறவரின் மனநிலையைப்பொறுத்து, மன்னிப்பு அவர்கள் வழங்க வேண்டும். உண்மையிலே, ஒரு மனிதர் தனது பாவத்திற்கு மனம் வருந்தி, திருந்துகிறபோது கடவுளின் மன்னிப்பு அவருக்குக்கிடைக்கிறது. மனம்மாற்றம் இல்லாமல் வருகிறபோது, அங்கே நிச்சயம் மன்னிப்பு இல்லை.

பாவமன்னிப்பு என்கிற அருட்சாதனத்தை திருச்சபை நமக்குத்தந்திருக்கிறது. அந்த அருட்சாதனத்தைப்பயன்படுத்தி கடவுளுக்கு ஏற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான், திருச்சபையின் ஆசை. அதை சரியாகப்பயன்படுத்தி இயேசுவின் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.