பிணி தீர்ப்பதற்கான வல்லமை !

இயேசு போதித்துக்கொண்டிருந்தபொழுது முடக்குவாதமுற்ற ஒருவரை சிலர் கொண்டு வருகிறார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார் என்று இயேசுவைப் பற்றிச் சொல்கிறார் நற்செய்தியாளர் லூக்கா. பிணிகளைத் தீர்ப்பதற்கு ஒரு வல்லமை தேவை. அதைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே நோய்களைக் குணப்படுத்த முடியும். இயேசுவிடம் அந்த வல்லமை இருந்தது. காரணம், அவர் தூய ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டிருந்தார். தந்தை இறைவனின் அன்புக்கு உரியவராக இருந்தார். அந்த வல்லமையைக் கொண்டே இயேசு பேய்களை ஓட்டினார். நோய்களைக் குணப்படுத்தினார்.

நம்மிடம் அந்த வல்லமை இருக்கிறதா? நோய்களைப் போக்கும், தீமைகளை விரட்டும், துயரங்களைப் போக்கி மகிழ்ச்சியைத் தரும் வல்லமை நம்மிடம் உண்டா? இருந்தால்தான், நாம் கிறித்தவர்கள். இல்லாவிட்டால், நாம் வலிமையற்ற பெயர்க் கிறித்தவர்கள் மட்டுமே. கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர் கிறிஸ்தவரே அல்லர். எனவே, நாமும் தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, சான்றுகளாய் வாழ்வோம்.

மன்றாடுவோம்: தூய ஆவியின் வல்லமையைக் கொண்டவரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பிணி போக்கும் வல்லமையை நீர் கொண்டிருந்ததுபோல, உமது சீடர்களாகிய நாங்களும் தூய ஆவியின் வல்லமை உடையவர்களாக வாழச் செய்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

— அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.