பிற இனத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!

திருப்பாடல் 117: 1, 2, மாற்கு 16: 15

கடவுள் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டும் சொந்தம் என்கிற மாயையை உடைக்கிறது இந்த திருப்பாடல். இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்களுக்கு மட்டும் தான் உரியவர் என்கிற எண்ணம் கொண்டிருந்தனர். கடவுள் தங்களுக்கு மட்டும் தான் நன்மைகளைச் செய்வார், நமக்கு எதிராக இருக்கிற அனைவருமே கடவுளுக்கு எதிரானவர்கள் என்று நம்பினர். ஆனால், கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்கிற புதிய சிந்தனையை, இந்த திருப்பாடல் நமக்கு தருகிறது.

கடவுள் அனைவராலும் போற்றுதற்குரியவர். ஏனென்றால், அவர் எல்லாரையும் அன்பு செய்கிறார். எல்லாருக்குமான மீட்புத்திட்டத்தை அவர் வகுத்திருக்கிறார். குறிப்பிட்ட மக்களை மட்டும் மீட்க வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் விரும்பியதில்லை. அவருடைய பார்வையில் எல்லாருமே சமமானவர்கள் தான். எல்லாருமே அவருடைய பிள்ளைகள் தான். அவர் எல்லாருக்கும் நன்மைகளைச் செய்து கொண்டிருக்கிறவர். அந்த இறைவனை நாம் குறிப்பிட்ட மக்களுக்கானவர் என்று தவறாக புரிந்து கொண்டால், அவருடைய அன்பை உணர முடியாது. அவர் எல்லாருக்குமானவர் என்கிற புரிதல் நம்மிடம் வருகிறபோது, அவரைப் புரிந்து கொள்வது எளிதானதாக மாறிவிடுகிறது.

நம்முடைய வாழ்வில் கடவுளை நாம் எப்படிப்பார்க்கிறோம்? அவரை நமக்கும் சொந்தமானவராகப் பார்க்கிறோமா? அல்லது எல்லாருக்கும் சொந்தமானவராக பார்க்கிறோமா? என்று எண்ணிப்பார்ப்போம். கடவுளை அனைவருக்குமானவராகப் பார்க்கிறபோது, நாம் அவரிடத்தில் கொண்டிருக்கிற நம்பிக்கையும், அன்பும் நிச்சயம் கூடுதலாகவே இருக்கும்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.