பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்

திருப்பாடல் 98: 1, 2 – 3ab, 3cd – 4

நீதி என்பது ஒருவருக்கு உரியதை அவருக்கே கொடுப்பது ஆகும். அது பரிசாகவும் இருக்கலாம், தண்டனையாகவும் இருக்கலாம். பிற இனத்தார் முன் கடவுள் தம் நீதியை எப்படி வெளிப்படுத்தினார்? அவர்கள் எப்படி கடவுளின் நீதியை கண்டு கொண்டனர்? கடவுளைப் பற்றிய பார்வை, கடவுள் தன்னை வழிபடும் மக்களுக்கு உதவியாக இருப்பார் என்பது. அவர்கள் தவறு செய்தாலும் அவருக்காகவே அவர் போரிடுவார், அவர்கள் பக்கம் தான் அவர் நிற்பார் என்பதாகும். இதைத்தான் இஸ்ரயேல் மக்களும் நம்பினர், மற்றவர்களும் எண்ணினர்.

இஸ்ரயேல் மக்களின் கடவுளைப் பொறுத்தவரையில் அவரும் மற்ற கடவுளைப் போல, இஸ்ரயேல் மக்கள் தவறு செய்தாலும், அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று பிற இனத்தவர் எண்ணினர். ஆனால், நடந்தது வேறு. இஸ்ரயேல் மக்கள் தவறு செய்தபோதெல்லாம், அவர்களை தண்டிக்கக்கூடியவர்களாக கடவுள் தன்னை வெளிப்படுத்தினார். இது கடவுள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கானவர் அல்ல என்பதையும், அவர் நீதியின்படி நடக்கிறவர் என்பதையும், பிற இனத்தவர் அறிந்து கொள்ள செய்தது. இது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்த ஆச்சரியத்திலிருந்து அவர்கள் மீண்டு, கடவுளைப் போற்றச் செய்தது. எனவே, கடவுள் அனைத்துலகினரும் போற்றுதற்குரிய கடவுளாக மாறிவிட்டார்.

நாம் எந்த மதத்தைச் சார்ந்திருக்கிறோம் என்பதை விட, நாம் சார்ந்திருக்கிற மதத்தின் விழுமியங்களை, நாம் கற்றுக்கொண்ட உண்மையை எந்த அளவுக்கு வாழ்வாக்குகிறோம் என்பதுதான் கடவுள் முன்னிலையில் பார்க்கப்படுமே தவிர, வெறும் சடங்குகளும், வெற்றுச்சம்பிரதாயங்களும் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படாது.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.