புனித பெரிய யாக்கோபு திருவிழா

மத்தேயு 20:20-28

இன்று பெருமகிழ்வோடு நாம் புனித பெரிய யாக்கோபு நினைவு நாளைக் கொண்டாடுகிறோம். இவர் பெரிய யாக்கோபு என்றும் சந்தியாகப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பெத்சாய்தா ஊரைச் சார்ந்த செபதேயு, சலோமி ஆகியோரின் மகன். ஏன் இவரை பெரிய யாக்கோபு என்று அழைக்கின்றனர் என்பதற்கு, மற்றவர்களை விட வயதில் மூத்தவராக இருந்தவர். பெரிய உடல்வாகு உடையவர். அல்பேயுவின் மகன் யாக்கோபுவுக்கு முன்னதாக இயேசுவினால் அழைக்கப்பட்டவர் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இவ்வுலகில் வாழும் மனிதர்கள் பெரிய பணக்காரர்களாக மாற வேண்டும் என அதிகமாக ஆசைப்படுகின்றனர். அதற்காகவே வாழ்நாள் முழுவதும் செலவழிக்கின்றனர். செலவழித்த பின் அமைதியின்றி, அனந்தமின்றி அலைகின்றனர். இதன் விளைவாக வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என சோகப் பாடல்களை பாடிக் கொண்டு திரின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் புனித பெரிய யாக்கோபு விழா நம்மை பெரிய பணக்காரர்களாக மாற அன்புடன் அழைக்கின்றது. எதில் பெரிய பணக்காரர்களாக மாற வேண்டும். ஆன்மீத்தில் பணக்காரர்களாக மாற வேண்டும். ஆன்மீக வறுமையை ஒழிக்க வேண்டும். இதைத்தான் திருமுழுக்கு யோவான், “எனது செல்வாக்கு குறைய வேண்டும், உமது செல்வாக்கு பெருகு வேண்டும் (யோவான் 3:30)” என்கிறார்.

இயேசுவுடன் உடனிருந்து அவருடைய போதனையைக் கேட்ட, புதுமைகளைக் கண்ணுற்ற, வேதனைகள உய்த்துணர்ந்த ஒருவர் இந்த யாக்கோபு. இவர் கிறிஸ்துவின் அனைத்து நிகழ்வுகளிலும் இருந்தவர். கிறிஸ்துவை அப்படியே அனுபவித்தவர். இதன் வழியாக ஆன்மீகத்தில் செல்வாக்கு மிக்கவர் ஆனார். ஆன்மீக பணக்காரர் இவர். ஆன்மீகத்தில் செல்வ செழிப்புமிக்கவரான இவர் தன்னோடு இருந்த மக்களுக்கு ஆன்மீக செல்வத்தை பகிர்ந்தார். அவர்களும் கிறிஸ்துவின் செல்வச் செழிப்பில் பங்கேற்க வழியமைத்துக் கொடுத்தார்.

மனதில் கேட்க…
• ஆன்மிக வறுமை என்னிடத்தில் உள்ளதா?
• ஆன்மிக செழிப்புமிக்க பெரிய பணக்காரனாக மாறலாமா?

மனதில் பதிக்க…
நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள் (கொலோ 3:24)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.