புனித வாழ்வு

உணர்வுகளின் வெளிப்பாடு தான் அன்பு. இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனையும் முழுமையாக அன்பு செய்தவர் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. ஏழைகள், அடிமைகள், நோயாளிகள் என்று, இந்த சமுதாயம் ஒதுக்கி வைத்திருந்த விளிம்புநிலை மக்களை, அவராகவே சென்று சந்தித்து, அவர்களும் கடவுளின் பிள்ளைகள் அவர்களுக்கும் எல்லா உரிமைகளும், கடவுளின் அன்பும் இருக்கிறது என்பதை, நிறைவோடு வாழ்ந்து காட்டியவர் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து.

இன்றைய நற்செய்தியிலும் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11), கடவுளின் அன்பு இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதை வாழ்ந்து காட்டுகிறார். குறைபாடுகள் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரையும் இந்த உலகம் இழிவாகத்தான் பேசும். அவர்களை ஒதுக்கித்தான் வைக்கும். அவர்களிடத்தில் பேசுகிறவர்களையும் இழிவாக நடத்தும். இதனாலேயே பலபேர் அப்படிச்செய்வது தவறு என்று தெரிந்தும், நமக்கேன் தேவையில்லாத வம்பு? என்று, இந்த உலகத்தோடு வாழப்பழகி விடுகிறார்கள். ஆனால், இயேசு அந்த எல்லையை மீறிச்செல்கிறார். அந்த வரம்பைக் கடந்து செல்கிறார். அந்த மரபை உடைத்துப்போடுகிறார். நம்மையும் அவர் போல வாழ அழைக்கிறார்.

கிறிஸ்தவ வாழ்வு ஒரு புனிதமான வாழ்வு மட்டுமல்ல, மரபுகளையெல்லாம் கடந்து மற்றவர்களை புனித நிலைக்கு உயர்த்த உதவுகிற வாழ்வு. இயேசு மட்டும் புனித வாழ்வு வாழவில்லை. தன்னைப்பின்தொடர்ந்த ஒவ்வொருவரையும், புனித வாழ்விற்கு அழைத்துச்சென்றார். நாம் அவர் வழியில் வாழ்ந்து புனிதத்தை அடைய முயல்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.