பூமியெங்கும் உலாவும் தேவன்

விண்ணையும்,மண்ணையும்,படைத்த நம் இறைவன் நம்முடைய எல்லா தேவைகளையும் சந்திப்பவராக இருக்கிறார்.ஆனால் நாம் தான் அவரிடம் கேட்காமல் நமது விருப்பத்துக்கு செய்துவிட்டு பிறகு மனம் தவிக்கிறோம். அவருடைய கண்கள் நம்மேல் எப்பொழுதும் உலாவிக்கொண்டே இருக்கிறது. நம்மை பாதுகாக்க வேண்டி அவர் கண்ணயர்வதுமில்லை,உறங்குவதும் இல்லை. நமது வலப்பக்கத்தில் எப்பொழுதும் நிழலாய் இருக்கிறார்.திருப்பாடல்கள் 121 – 4,5.

ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு,நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று வாக்கு அருளுகிறார்.அவர்மேலேயே நம் முழுநம்பிக்கையும் வைத்து காத்திருந்தால் நாம் ஆசீவாதத்தை பெற்றுக்கொள்ள எந்த தடையும் இல்லை. ஏனெனில் உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றது. அவரை நம்புவோருக்கு ஆற்றல் அளிக்கிறார். 2 குறிப்பேடு 16 – 9.

அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.அதனால் உலகெங்கும் வாழ்வோரே! ஆண்டவருக்கு புகழ்பாடுங்கள்.அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். மாட்சியை எடுத்துரையுங்கள்.அவரின் வியத்தகு செயல்களை போற்றுங்கள்.ஏனெனில் எல்லா தெய்வத்துக்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே! 1 குறிப்பேடு 16 – 14,23,25.

வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டோ? அல்லது வானங்கள் தாமாகவே மழையை பொழிய முடியுமா? நம் இறைவனாகிய ஆண்டவர் ஒருவரே அதைச்செய்யக் கூடியவர். ஆதலால் நாமும் அவரயே எதிநோக்குவோம். ஏனெனில் இவற்றை எல்லாம் செய்பவர் அவரே! எரேமியா 14 – 22. உலகின் உருண்டையின் மேல் வீற்றுப்பவர் அவரே! மண்ணில் வாழும் நாம் அவருக்கு வெட்டுக்கிளி போல் இருக்கிறோம். வானத்தை திரைச் சீலையென விரித்து குடியிருக்கும் கூடாரம்போல் அமைப்பவரும் அவரே! எசாயா 40 – 22 .

இப்படிப்பட்ட தேவனை அறிந்த நாம் எத்தனை பாக்கியம் பெற்றவர்கள் என்று சொல்லவும் வேண்டுமோ? ஆம் சொல்லத்தான் வேண்டும். யூதர் என்றோ,கிரேக்கர் என்றோ,வேறுபாடில்லை. அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே! மற்றவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்லமுடியுமா?கேள்விப்பட்டார்கள். ஏனெனில் அவரது அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது.நற்செய்தி அறிவிப்பாளர் கூறும் செய்தி இதோ உலகின் கடைஎல்லைவரை செல்கிறது. ஆனால் அவர்கள் இதயம் திறக்கப்படவில்லை. இதை வாசிக்கும் நீங்களும் கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்துஅவர்களை ஆண்டவரண்டை வழிநடத்துவோம். அவரின் கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டு இருப்பதை புரியவைப்போம்.

ஜெபம்

அன்புள்ள தகப்பனே!பிதாவே! இதோ இரவும்,பகலும் உமது கண்கள் எங்களை நோக்கிக்கொண்டு இருப்பதால் உமக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் உம்மை கண்டுக்கொள்ள கிருபை அளித்தீரே இதுபோல் எங்கள் ஒவ்வொரு சகோதர, சகோதரிகளும் கண்டுக்கொள்ள கிருபை பாராட்ட வேண்டுமாய் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் மன்றாடுகிறோம், எங்கள் ஜெபம் கேளும் நல்ல ஆண்டவரே! எங்கள் ஜெபம் தூபமாகவும், எங்கள் கையெடுப்பு அந்திப்பலியாகவும் உம்மிடத்தில் வரக்கடவது. பூமி எங்கும் உலாவும் உமது கண்கள் எங்களை நல்வழி படுத்த வேண்டுமாய் உம்மிடத்தில் வேண்டி நிற்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே! ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.