பொதுநலப்பணி

பிறருக்கு உரியவற்றில் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகுந்தவராய் இருக்க வேண்டும் என்று இயேசு அழைப்புவிடுக்கிறார். பிறருக்கு உரியது எது? இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கக்கூடிய பலவிதமான பொருட்கள், பணிகள் மற்றவர்களுக்கு உரியது தான். உதாரணமாக, மக்களுக்கு பணியாற்றுவதற்காக அரசு பதவிகள், அதிகாரம் படைத்த பதவிகள், மக்களின் வரிப்பணம் – அனைத்துமே மற்றவர்களுக்குரியது. பொதுமக்களுக்குரியது. அந்த பதவியும், பணமும் ஒரு சிலரிடத்தில் கொடுக்கப்படுகிறது. எதற்காக? அதனை திறம்பட கையாண்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதற்காக. அந்த பணியைச் செய்வதில் நாம் நம்பத்தகுந்தவராய் இருக்கிறோமா? என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி.

பிறருக்கு உரிய இந்த பணிகளை எத்தனையோ மனிதர்கள் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, நம்மை ஆளக்கூடிய தலைவர்கள். அவர்களின் ஆட்சியில் பணிசெய்யக்கூடியவர்கள். பிறருக்கு உரிய இந்த பணிகளை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதின், இலட்சணம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதில் மற்றவர்களைக் குறைசொல்லாமல், நாம் அந்த பணிகளில் இருந்தால், எப்படி செய்கிறோம்? என்பதை, நாம் நம்மைப்பார்த்துக் கேட்க வேண்டும். இன்றைக்கு கேள்வி கேட்கிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடத்தில் அந்த பொறுப்பு கொடுக்கப்படுகிறபோது, அவர்களும் அதே தவறுகளைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால், அடிப்படையில் எங்கே தவறு இருக்கிறது? ஏன் மக்களுக்கான பணிகள் சரியான வளர்ச்சிப்பாதையில் செல்லவில்லை? எது மக்கட்பணிகளுக்கு இடையூறாக இருப்பது? இதுபோன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு மனிதனும் பொறுப்பேற்று, இடையூறுகளைக் களைய முன்வர வேண்டும்.

பொதுநலப்பணிகளில் நாம் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். அது நமக்கான ஆதாயம் அல்ல. அது நமக்கான முழுமையான பணி. அந்த பணியின் மூலமாக, நாம் கடவுளின் முழுமையான ஆசீரைப்பெற்றுக்கொள்ள முடியும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.