பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4, 6

நற்பேறு பெற்றவர் யார்? என்கிற கேள்வி திருப்பாடல் ஆசிரியரால் முன்வைக்கப்படுகிறது. அதாவது, இந்த உலகத்திற்கு வாழ்வதற்குத் தேவையான எல்லா ஆசீர்வாதங்களையும், கடவுளின் அருளையும் பெற்றவர் யார்? என்பது தான், இந்த கேள்விக்கான விளக்கமாக இருக்கிறது. இதற்கு பல வகையான வாழ்க்கைநெறிகளைப் பதிலாக வழங்கினாலும், ஆசிரியர் கொடுக்கிற முதல் பதில், பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்.

யார் பொல்லாதவர்? இந்த உலகத்தில் சுயநலத்தோடு சிந்திக்கிறவர்கள் அனைவருமே பொல்லாதவர்கள் தான். அவர்களின் பார்வை குறுகியதாக இருக்கிறது. அவர்கள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாதவர்கள். தங்களது தேவைகள் எப்படியாவது, எந்த வழியிலாவது பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறவர். அவர்களது சொல்லை நாம் எப்போதும் கேட்கக்கூடாது என்று நாம் அறிவுறுத்தப்படுகிறோம். ஏன் பொல்லாதவரின் சொல்லைக் கேட்கக்கூடாது? ஏனென்றால், அவர்கள் எப்போதும், பொதுநலனுக்காகச் சிந்திப்பவர்கள் கிடையாது. அவர்களது வழிகள் தீயதாகவே இருக்கிறது. அவர்களது எண்ணங்கள் வறண்டு போன எண்ணங்களாகத்தான் இருக்கிறது. நாம் அவர்களின் வார்த்தைகளைக் கேட்டால், நாமும் அவர்களைப் போல சிந்திக்கத் தொடங்கிவிடுவோம். நமது வாழ்க்கையும் அவர்களைப் போல, பயனற்ற வாழ்வாக மாறிவிடும்.

இன்றைய அரசியல் தலைவர்கள், அதிகாரம் செய்கிறவர்கள் அனைவருமே சுயநலத்தோடு சிந்திக்கிறவர்களாக இருக்கிறார்கள். அதுதான், இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது. அவர்களது வழியில் அல்லாமல், கடவுள் வகுத்துத் தந்திருக்கிற வழியில் நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.