போதாது என்ற மனம் வேண்டும்

மத்தேயு 25:14-30

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

வாழ்க்கையில் நான் வளா்ந்துவிட்டேன் என்று யாரும் சொல்ல முடியாது. எல்லாருமே வளா்ந்துக் கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து வளர கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் திறமைகளை நன்கு பயன்படுத்த வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகம் கடவுள் கொடுத்த திறமைகளை ஒருவர் பயன்படுத்தும் போது அவர் எப்படி வளருகிறார் எனவும் கடவுளின் நன்மதிப்பை எப்படி பெறுகிறார் என்பதையும் எடுத்துரைக்கிறது. மேலும் கடவுள் கொடுத்த திறமைகளை சரியாக பயன்படுத்தாதவர் எப்படி இன்னுலுகிறார் என்பதையும் சொல்கிறது. இரண்டு பிரச்சினைகளை அவர் சந்திக்கிறார்.

1. மரியாதை இருக்காது
சரியாக திறமைகளை பயன்படுத்தாதவருக்கு மரியாதை என்பது இல்லை. அவர் வீட்டிலும் மதிக்கப்படுவதில்லை, காட்டிலும் மதிக்கப்படுவதில்லை. எங்கு சென்றாலும் அவா் தூரே தூக்கி எறியப்படுகிறார்.

2. மகிழ்ச்சி இருக்காது
திறமைகளை நாம் சரியாக பயன்படுத்தும்போது நாம் பாராட்டுக்களை பரிசாக நம் இரத்த உறவுகள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலரிடமிருந்து பெறுவோம். அதில் ஊறுகின்ற மகிழ்ச்சி அளவே இல்லை. திறமைகளை நாம் பயன்படுத்தவில்லை என்றால் நாம் யாரிடமிருந்தும் பாராட்டுக்களை பெறுவது இல்லை. ஆகவே இயல்பிலே மகிழ்ச்சி என்பது நமக்கு எட்டாமல் போகிறது.

மனதில் கேட்க…
1. எனக்கு மரியாதை, மகிழ்ச்சி இரண்டையும் என் திறமைகள் தானே தர முடியும்?
2. நான் பெற்றிருப்பது போதாது இன்னும் வளருவேன். திறமைகளைப் பயன்படுத்துவேன். இந்த வேகத்தோடு செயல்படலாமா?

மனதில் பதிக்க…
நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன.(மத் 25:21)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.