மகிழ்ச்சியும் இரக்கமுமே நற்செய்தி

தூய லூக்கா நற்செய்தியாளர் திருவிழா
லூக்கா 10:1-9

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் நற்செய்தியாளர் தூய லூக்கா திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

சிரியாவின் அந்தியோக்கு நகரில் பிறந்த லூக்கா, ஒரு மருத்துவர். ஓவியரும் கூட என்று வரலாறு கூறுகிறது. புறவினத்தாராகிய லூக்கா, அப்போஸ்தலர் பவுலுடன் இணைந்து உழைத்தார்.
“அன்புமிக்க மருத்துவர் லூக்கா” என்று பவுல் இவரைக் குறிப்பிடுகிறார்.
நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவின் பணிவாழ்வை இறையரசுப் போதனையை மிகவும் சிறப்பான விதத்தில் வடித்துத் தந்துள்ளார்கள். அவற்றுள் தூய லூக்காவின் நற்செய்தியானது மகிழ்வின் நற்செய்தியாக இரக்கத்தின் நற்செய்தியாக விளங்குவதை பார்க்கின்றோம். தூய லூக்கா இயேசுவைக் கனிவுள்ளவராக இரக்கமுள்ளவராக எல்லோருக்கும் வாழ்வளிப்பவராகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

கிரேக்க குலத்தைச் சார்ந்தவரான தூய லூக்கா சிரியாவில் உள்ள அந்தியோக்கியா நகரைச் சார்ந்தவர். பாலஸ்தீனாவின் வடபுறத்திலே இவரது இருப்பிடம் அமைந்திருந்தது. சிறந்த கல்விமானாகிய இவர் மருத்துவம், கவிதை, கலை, குழு ஆய்வு, விளையாட்டு போன்ற துறைகளில் கை தேர்ந்தவர். கனிவான குணம், இரக்க உள்ளம், தாராளமாக உதவும் மனப்பான்மை எல்லாம் இவருடைய குணநலன்கள். இதற்கு இவரது எழுத்துக்களே சாட்சி.

தூய லூக்கா இயேசுவை நேரில் கண்டதுமில்லை. அவரது போதனைகளைக் கேட்டதுமில்லை. இவர் யூதனும் அல்லர். ஆனால் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பியதில் அந்தியோக்கியா நகரம் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஸ்தேவானின் மறைசாட்சிக்குப் பிறகு இந்த இடத்தை தேர்ந்தெடுத்து யூதரல்லாத மக்களுக்கு இயேசுவின் நற்செய்தியை பேதுருவும் திருத் தூதர்களும் மற்றப் பணியாளரும் அறிவித்து வந்தனர்.

பலரும் மனம் மாறி இயேசுவை ஏற்றுக் கொண்டனர். (தி.ப. 11:19) தூய பவுல் மற்றும் பர்னபாஸ் இத்தகைய நற்செய்திப் பணியில் முழுப் பங்கு வகித்தனர். இத்தகைய சூழ்நிலையில் நான் அந்தியோக்கியா நகரில் வாழ்ந்து வந்த லூக்கா இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் மீட்பராக ஏற்றுக் கொண்டு அவரது பணிக்கெனத் தன் வாழ்வை அர்ப்பணித்தார். இயேசுவின் வாழ்வை பணியை இலக்கை எடுத்துச் செல்லும் மாபெரும் நற்செய்தியாளராக உருமாறினார். தூய லூக்கா போன்று நாமும் மகிழ்ச்சியின் இரக்கத்தின் நற்செய்தியாக இரண்டு செயல்களை நாம் செய்ய வேண்டும்.

1. புன்னகையால் வரவேற்பு
“அழகும் கலரும் கண்களை கவரும், ஆனால் புன்னகை மட்டுமே இதயத்தை கவரும்” என்பது சான்றோர்கள் கூற்று. இன்று சந்திக்கிற ஒவ்வொரு நபரையும் புன்னகையால் வரவேற்போம். நாம் பிறருக்கு அறிவிக்கிற நற்செய்தி மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

2. புனித செயலால் வரவேற்பு
ஆனந்தமாக வாழ ஆடம்பரம் தேவையில்லை, அன்பானவர்கள் உனிருந்தால் வாழ்க்கை இனிமையாகும் என்பது அறிஞா்கள் கூற்று. நாம் அன்பானவர்களாக மாறுவோம். இரக்கமுள்ளவர்களாக இருப்போம். அன்பு, இரக்கம் இதுவே நாம் இன்று சந்திக்கிற அனைவருக்கும் நம்மிடமிருந்து நற்செய்தியாக கிடைக்கட்டும். இதுவே நாம் செய்யும் புனித செயலும்கூட.

மனதில் கேட்க…
1. நான் பிறருக்கு கொடுக்கின்ற நற்செய்தி என்ன?
2. புன்னகையால், புனித செயலால் பிறருக்கு தினமும் வரவேற்பு கொடுக்கலாம் அல்லவா?

மனதில் பதிக்க…
ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள், மீண்டும் கூறுகிறேன். மகிழுங்கள்(பிலி 4:4)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.