மகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்

திருப்பாடல் 122: 1 – 2, 3 – 4ஆ, 4இ – 5

இந்த திருப்பாடல் இஸ்ரயேல் மக்களின் பயன்பாட்டிற்காக தாவீது அரசரால் எழுதப்பட்ட பாடல். எருசலேம் மக்கள் திருவிழாக்களைக் கொண்டாடுவதில் இன்பம் கண்டனர். கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கடவுளின் திருப்பெயரைப் போற்றுவதற்காகவும் இதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். தாவீது அரசரின் காலத்தில் தான், எருசலேம் நகர் முக்கியத்துவம் பெற்றது. மக்கள் திருவிழாக்களைச் சிறப்பிப்பதற்கு எருசலேம் நகர் வருவது வழக்கம். புனித நகரமாக கருதப்பட்ட எருசலேமின் சிறப்பை இந்த பாடல் எடுத்துரைக்கிறது.

எருசலேம் என்பது ஆண்டவர் வசிக்கக்கூடிய இல்லம் மட்டுமல்ல. மாறாக, விண்ணகத்தின் பிரதிபலிப்பாக எருசலேம் நகர் மக்களால் பார்க்கப்பட்டது. எருசலேம் நகரத்திற்குச் செல்வது விண்ணகத்திற்கு செல்வது போன்றதொரு மனநிலையை உருவாக்கியது. எருசலேம் செல்வதை மக்கள் கடவுளின் புனித நகரத்திற்கு அதாவது விண்ணக நகரத்திற்குச் செல்வதாக உணர்ந்தனர். அந்த ஆண்டவரின் இல்லத்திற்குச் செல்வதற்கு நாம் மகிழ்ச்சியான உள்ளத்தோடு செல்ல வேண்டும் என்று ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். நம்முடைய வாழ்வில் எவ்வளவு தான், வருத்தங்களும், கவலைகளும் இருந்தாலும் அதனைப்பற்றி கவலைப்படாமல், நம்பிக்கை உணர்வோடு செல்வதற்கு இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

ஒவ்வொரு முறையும் நாம் ஆலயத்திற்குச் செல்கிறபோது, ஆலயத்தில் இருக்கிறபோது, மகிழ்ச்சியான உள்ளத்தோடு இருக்க வேண்டும். கடவுள் மீது நம்பிக்கையுணர்வுடன் நாம் ஆலயம் செல்கிறபோது, நிச்சயம் எவ்வளவு வருத்தங்கள் நம்முடைய உள்ளத்தில் இருந்தாலும், அது நமக்கு மகிழ்வான அனுபவத்தையே தரும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.