‘மண்ணுலகில் தீமூட்ட வந்தேன்” (லூக்கா 12:49)

நெருப்பு பல விதங்களில் நமக்குப் பயன்படுகிறது. உணவு சமைப்பதற்கு நெருப்பு உதவுகிறது. குளிர் காலத்தில் நெருப்பின் அருகே அமர்ந்து குளிர்காய்வது இதமான அனுபவம். அழுக்குகளைச் சுட்டெரித்து அழிப்பதற்கும் நெருப்பு பயன்படுகிறது. அதே நேரத்தில் நெருப்பு அழிவுக்கும் காரணமாகலாம். கலவரங்கள் ஏற்படும்போது வீடுகளுக்கும் ஊர்களுக்கும் தீவைத்து அழிக்கின்ற செயல்கள் இப்போதும் நடந்துவருவது ஒரு கசப்பான அனுபவம். இயற்கையாகவோ மனிதரின் கவனக்குறைவாலோ காடுகளில் தீ எரிந்து பெரும் அழிவு ஏற்படுவதும் உண்டு. இவ்வாறு ஆக்கவும் அழிக்கவும் பயன்படுகின்ற தீயை மூட்டிவிட இயேசு வந்தார் என்றால் அதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இயேசுவின் உள்ளத்தில் ஒரு தீ எரிந்துகொண்டிருந்தது. அதுதான் கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்னும் தணியாத ஆர்வம். இந்த ஆர்வத்தால் உந்தப்பட்ட இயேசு இவ்வுலகத்தில் மனித உள்ளங்களில் ஒரு தீயை மூட்டிட வந்தார். கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணரவேண்டும் என்னும் ஆர்வம்தான் இயேசுவின் போதனைக்கும் செயல்பாட்டுக்கும் உந்துசக்தியாக அமைந்தது.

இயேசு இவ்வுலகில் மூட்டவந்த தீ ஆக்கவும் அழிக்கவும் வல்லது. நம்மிடமிருக்கின்ற சுயநலப் போக்கையும் தீய நாட்டங்களையும் அழிக்கின்ற சக்தி அதற்கு உண்டு; அதே நேரத்தில் நம்மைத் தூய்மைப்படுத்தி, நமக்குப் புத்துணர்வு அளித்து, நம்மைப் புடமிட்டுப் புத்தொளி வீசச் செய்கின்ற பண்பையும் இயேசு மூட்டுகின்ற தீயில் நாம் காணலாம். இயேசு கொணர்கின்ற தீ நம்மை மட்டும் மாற்றுவதோடு நின்றுவிடுவதில்லை. அவர் மூட்டுகின்ற தீ நம்மிடமிருந்து பிறருக்கும் பரவ வேண்டும். பிறரும் இறையாட்சியை விரிவடையச் செய்யவேண்டும் என்னும் தீயால் பற்றியெரிய வேண்டும். இதற்கு நாம் கருவிகளாக மாறினால் இந்த உலகமே மாற்றுருப் பெற்று இறையாட்சிக்குச் சாட்சியாக மாறும். இதுவே இயேசு கண்ட கனவு.

மன்றாட்டு
இறைவா, உம் அன்புத் தீ எங்கள் உள்ளங்களில் என்றுமே அணையா விளக்காக எரிந்திட அருள்தாரும்.

~ அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.