மனநிலையை மாற்றுவோம்

இன்றைய நற்செய்தியில் (மாற்கு 8: 11-13) இரண்டு விதமான மனநிலையைப் பார்க்கிறோம். 1. இயேசுவின் மனநிலை 2. பரிசேயரின் மனநிலை. இயேசுவுக்கு நிச்சயமாக வானிலிருந்து அடையாளம் தோன்றச்செய்வது ஒன்றும் கடினமான காரியமல்ல. அவர் நினைத்திருந்தால், எதையும் அவரால் செய்திருக்க முடியும். இதே சோதனை, அவர் பாலைவனத்திலே நாற்பது நாட்கள் நோன்பிருந்து செபிக்கிறபோதும் ஏற்படுகிறது. அப்போதும் அலகையின் சோதனைக்கு இடங்கொடுத்து அருங்குறிகளைச் செய்யவில்லை. இப்போது பரிசேயர்களும் இயேசுவைச் சோதிக்கிறார்கள். ஆனால், இயேசு அதனை நிராகரிக்கிறார். இயேசுவின் வல்லமை தன்னை, தன்னுடைய பலத்தை மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக அல்ல. மாறாக, இறையரசைக் கட்டி எழுப்புவதற்காக. இறைவனை மாட்சிமைப்படுத்துவதற்காக. எக்காரணத்திற்காகவும், அதனை தனது சுயவிளம்பரத்திற்கு இயேசு பயன்படுத்த விரும்பவில்லை.

பரிசேயர்கள் இயேசுவின் புதுமை செய்யும் ஆற்றலை தெரியாதவர்கள் அல்ல. இயேசுவின் அறிவின் ஆழத்தைக் கண்டு அதிசயிக்காதவர்கள் அல்ல. இயேசு தச்சர் மகன் என்றாலும், அவரிடத்திலே தங்கள் அறிவுத்திறமை செல்லாது, என்பதை உணராதவர்கள் அல்ல. இயேசு செய்த அனைத்துப்புதுமைகளும் அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், அவர்கள் இயேசுவிடத்திலே அடையாளம், அருங்குறிகளைக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்பது உண்மையான நோக்கத்தோடோ, அல்லது தங்களது நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காகவோ அல்ல. அவர்களது மனநிலையும் சரியான மனநிலை அல்ல. இயேசு அடையாளம் காட்டியிருந்தாலும், அவற்றில் குற்றம் கண்டு, இயேசுவை இகழவே நிச்சயம் முயன்றிருப்பார்கள். உண்மையற்ற நிலை, அவர்களை மிகக்கீழாக மதிப்பிடத் தோன்றுகிறது.

எதையும் திறந்த மனதோடு, உண்மை மனநிலையோடு அறிந்து கொள்ள முயற்சி எடுப்பது மிக, மிக அவசியம். அப்படிப்பட்ட மனநிலை இன்றைக்கு மக்களிடம் காண்பது அரிதாகிவிட்டது. சுயதேவைகளுக்காக மனச்சாட்சியை மழுங்கடிக்கக்கூடியவர்களாக மக்கள் வாழத்தொடங்கி விட்டார்கள். அந்த மனநிலையை மாற்ற முன்வருவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.