”மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும்…அழிவீர்கள்” (லூக்கா 13:3)

இயேசு கடவுளாட்சி பற்றி அறிவித்த போது மக்கள் மனம் மாறி நற்செய்தியை நம்பவேண்டும் என்று கேட்டார். உள்ளத்தில் மாற்றம் ஏற்படும்போது மனித சிந்தனையில் மாற்றம் தோன்றும்; சிந்தனை மாறும்போது நம் ஆழ்ந்த நம்பிக்கைகள் புதிய நிலை அடையும்; நம்பிக்கைகள் உருமாற்றம் பெறும்போது நம் செயல்கள் அவற்றிற்கு ஏற்ப அமையும். எனவே, மனம் மாறுங்கள் என்று இயேசு விடுத்த அழைப்பு மனித வாழ்க்கையில் பேரளவிலான ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்று இயேசு விரும்பியதைக் குறிக்கின்றது. மாற்றம் என்பது எப்போதுமே நலமாக அமையும் என்பதற்கில்லை. சிலர் நல்லவர்களாக இருந்து தீயவர்களாக மாறக் கூடும். ஆனால் இயேசு எதிர்பார்த்த மாற்றம் அதுவன்று. இயேசு யார் என்பதை மக்கள் முழுமையாக உணராமல், இயேசுவின் வாழ்வில் கடவுள் ஒரு மாபெரும் புதுமையை நிகழ்த்துகிறார் என்பதை அறியாமல் இருந்த வேளையில்தான் இயேசு அவர்கள் தங்களுடைய மன நிலையை மாற்றிக்கொண்டு, கடவுள் தாமே இயேசுவின் வழியாக மக்களுக்கு மீட்புப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிறார் என்பதை உள்ளத்தின் ஆழத்தில் ஏற்று, அதற்கு ஏற்ற பதில்மொழி வழங்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை முன்வைக்கிறார்.

மனிதர் தம் வாழ்க்கை முறையை மாற்றி நல்வழியில் செல்ல வேண்டும் என்று கடவுள் அழைப்பு விடுக்கும்போது அந்த அழைப்பினை யாவரும் உடனடியாக ஏற்றுக்கொள்வர் என்பதற்கில்லை. சிலர் தங்கள் பழைய வாழ்க்கையிலேயே ஊறிப்போயிருப்பர்; வேறு சிலர் மாற்றம் உடனடியாக வேண்டாம் என்று கால தாமதம் செய்வர்; மற்றும் சிலர் மனமுவந்து தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கொணர்வர். எவ்வாறாயினும், கடவுள் பொறுமையோடு செயல்படுகிறவர். அத்திமரம் காய்த்து கனிதரும் என்று எதிர்பார்த்த வேளையில் அதிலிருந்து கனி தோன்றவில்லை என்றால், அம்மரத்தை உடனடியாக வெட்டி வீழ்த்துவதற்குப் பதிலாகப் புதிதாக எருபோட்டு அதைக் கண்காணித்து அதிலிருந்து கனிதோன்றும் என்று இன்னும் ஓர் ஆண்டு பொறுமையோடு காத்திருப்பவர் நம் கடவுள் (காண்க: லூக்கா 13:6-9). என்றாலும் கடவுளின் பொறுமையை நாம் சோதிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் வாழ்க்கையில் உம் உடனிருப்பை உணர்ந்து, நற்செயல்கள் என்னும் கனியை ஈந்தளிக்க அருள்தாரும்.

~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.