மனிதரைப் பிடிப்பவரான அந்திரேயா !

திருத்தூதரான புனித அந்திரேயாவின் விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இவர் பேதுரு சீமோனின் சகோதரர். மீன் பிடிப்பவர். இவரை இயேசு சந்தித்து என் பின்னே வாருங்கள். உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்று அழைத்தார். அந்த அழைப்பை அந்திரேயா உடனே ஏற்றுக்கொண்டார். தன் சகோதரர் பேதுருவுடன் இணைந்து வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார். இயேசுவும் அவரைத் திருத்தூதராக்கி, இறையாட்சிக்காக மனிதரைப் பிடிக்கும் மீனவராக மாற்றினார்.

இந்த நாளில் புனித அந்திரேயாவின் மாதிரியை நாமும் பின்பற்றுவோம். அழைப்பைக் கேட்டதும் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் என்ற வரிகள் அவர்களின் செவிமடுத்தலின் தன்மையை விளக்குகின்றன. இயேசுவின் சீடர்கள் தேவையற்றவைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்ற வேண்டும். நம் வாழ்வின் வலைகள் என்ன என்பதைக் கண்டு, அவற்றை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றுவோம்.

மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, அந்திரேயாவை உம் சீடராகப் பெயர் சொல்லி அழைத்ததுபோல, என்னையும் அழைத்ததற்காக நன்றி. அந்திரேயாவைப்போல அனைத்தையும் விட்டுவிட்டு உம்மைப் பின்தொடரும் வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

திருத்தூதர் அந்திரேயா

அந்திரேயாஸ் என்னும் கிரேக்கச்சொல்லுக்கு பலமுள்ளவன், ஆண்மையுள்ளவன் என அர்த்தம் சொல்லப்படுகிறது. சீமோன் பேதுருவின் மூத்த சகோதரர் தான் அந்திரேயா. திருத்தூதர்களில் இவர் தான் வயதில் மூத்தவர். இவருடைய சகோதரர் பேதுருவுக்கு நேர் முரணானவர் அந்திரேயா. ஏனென்றால், பேதுரு அதிகம் பேசுகிறவர். எதற்கெடுத்தாலும், முதலில் ஏதாவது ஒரு பதிலைச் சொல்கிறவர். ஆனால், அந்திரேயா அமைதியானவர்.

அந்திரேயா தான் இயேசுவின் முதல் சீடர் என்று சொன்னால், அது மிகையாக இருக்காது. அதேபோல தான் பார்த்த இயேசுவைப்பற்றி, தன்னுடைய சகோதரர் பேதுருவிற்கு நற்செய்தி அறிவித்தவர் இந்த அந்திரேயா. எனவே, இவரை முதல் மறைபோதகர் என்று அழைத்தாலும், அந்த பட்டம் இவருக்கு சரியாகப் பொருந்தும். அந்திரேயாவிடத்தில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான பண்பு ஒன்று இருக்கிறது. பேதுருவை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தியது அந்திரேயா தான். ஆனால், பேதுரு தான், மூன்று முக்கிய சீடர்களுள்ள ஒருவராகத் திகழ்ந்தார். இது அந்திரேயாவிற்கு பொறாமையைக் கொடுக்கவில்லை. தன்னுடைய சகோதரன் இயேசுவுக்கு நெருக்கமாக இருப்பதைப் பார்த்து, அவர் மகிழ்ச்சியடைகிறார். திருத்தூதர்களுள் ஒருவராக இயேசு கொடுத்த கொடையையே, அவர் மிகுந்த பாக்கியமாகக் கருதக்கூடியவராக எண்ணினார்.

இன்றைய உலகில் சகோதரப்பாசம் என்றால் என்ன? என்று கேட்கக்கூடிய அளவில் தான், சகோதரர்களுக்கு இடையேயான பாசம் இருக்கிறது. திருமணம் முடிந்தவுடன், தங்களுக்கென்று குடும்பம் வந்தவுடன், பாசம் மறைந்து, பணமும், சொத்தும் மிகப்பெரிய பிரச்சனைகளாக உருவெடுக்கின்றன. பணத்திற்காக, சொத்திற்காக கொலை செய்யக்கூடிய அளவுக்கு சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உடன்பிறந்தவர்களை அன்பு செய்யும் வரம் வேண்டி, ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.