மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்

இனிய சுவையுடன் கனிந்த கனி இருக்க கள்ளிக் காயைக் கடிக்கும் கடின மனத்தினர் சிலர். ஊரெல்லாம் ஒளி வெள்ளமாக இருந்தாலும் சிலர் ஒதுங்கியே இருப்பர். ஊரெல்லாம் ஒன்று கூடி தேரிளுக்கும். ஆனால் அவர்கள் மட்டும் வேரெதையோ நோட்டமிட்டிருப்பார்கள். கலகலப்பாக கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சிலர் கல்லாகி மூலையில் முடங்கிக்கிடப்பர்.

இப்படி இயல்பானதை விட்டு விட்டு,முரணான முறையில் செயல்படும்போது அவனில் ஏதோ ஒரு குறை உள்ளது என்று பொருள். ஒளியில் வந்தால் தன் அழுக்கு, அசிங்கம், குறை. குற்றம் தனக்குத் தெறிய வரும். பிறர் தெறிய நேரிடும். தன்போக்கினை மாற்ற வேண்டும் என்ற தயக்கம். கோயிலுக்கு வந்தால் தன் பாவ வாழ்வு தனக்குத் தெறிய வரும். மனமாற்ற வாழ்வுக்கு தயாராக வேண்டுமே என்ற பயம்.

இருளில் இருப்பது இப்படிப்பட்டவர்களுக்கு வசதியானது; சுகமானது; சௌகரியமானது. ஒளிக்குள் வருவதற்கு உடலை வளைக்க வேண்டும். உள்ளத்தை ஒடுக்கவேண்டும். நாலுபேரோடு கூடி கலகலப்பாக நல்லதைச் செய்ய பலவற்றை இழக்க வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டு கிடைக்கும் இன்பத்தைவிட வலி இல்லாமல் கிடைக்கும் அற்ப இன்பம் போதும் என விட்டில் பூச்சிளாய், ஒளியைவிட இருளையே விரும்பி வாழ்வை இழந்து விடுகின்றனர். ஒளியைத் தேடுவோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

–அருட்திரு ஜோசப் லியோன்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.