மாட்சிமிகு உம் பெயரை போற்றுகிறோம் ஆண்டவரே!

1குறிப்பேடு 29: 10, 11, 12

தாவீது கடவுளுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென்று விரும்புகிறார். அதனை கடவுளிடத்தில் வேண்டுகோளாகவும் பணிக்கிறார். ஆனால், தாவீது பத்சேபாவுடன் செய்த தவறு, அவருடைய வாழ்க்கையில் நீங்காத கறையாக படிந்துவிடுகிறது. கடவுள் தனக்கு ஆலயம் ஒன்று, தாவீதால் கட்டப்படுவதை விரும்பவில்லை. ஏனெனில், அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார். ஆனால், தாவீது கடவுளுடைய பணிக்காக செய்த பல நல்ல பணிகளை அவர் மறக்கவில்லை. எனவே, அவருடைய மகன் சாலமோன் வழியாக, தனக்கு ஆலயம் கட்டுவதற்கு அனுமதி தருகிறார். இந்த பிண்ணனியில் தான், இந்த பாடல் பாடப்படுகிறது.

ஆலயம் கட்டுவது தொடர்பான பணிகளைப் பற்றி, மக்களுக்கும், சபையோருக்கும் எடுத்துச்சொல்லிக் கொண்டிருக்கிற தாவீது அரசர், கடவுள் மீது தான் கொண்டிருக்கிற நம்பிக்கையை, தன்னுடைய ஆன்மீகத்தின் ஆழத்தை இந்த பாடல் வழியாக வெளிப்படுத்துகிறார். தாவீது கடவுளால் தண்டிக்கப்பட்டவர் தான். ஆனால், தாவீதின் உள்ளத்தில் தான், கடவுளால் தண்டிக்கப்பட்டோம் என்பதைக் காட்டிலும், கடவுளிடமிருந்து எவ்வளவோ பெற்றுக்கொண்டோம் என்பது தான், நினைவில் இருக்கிறது. இதுதான் அவருடைய ஆன்மீகத்தின் ஆழம். அவருடைய வாழ்வில் நடந்த ஒட்டுமொத்த நிகழ்வுகள், அவரை ஆன்மீகத்தில் முதிர்ச்சியுள்ளவராக அடையாளப்படுத்தியது.

நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும் கடவுள் மீது நம்முடைய நம்பிக்கை வைக்கிறவர்களாக, ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைந்தவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். இந்த அழைப்பு நம்முடைய செப வாழ்வை மேம்படுத்தட்டும். இந்த அழைப்பு நம்மை கடவுளின் பிள்ளைகளாக, அவரை நம்முடைய தந்தையாக ஏற்றுக்கொள்வதற்கு உறுதுணையாக அமையட்டும்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.