முகமலர்ச்சியோடு கொடுப்போம்

2கொரிந்தியர் 9: 6 – 10

கொடுத்தல் என்பது கிறிஸ்தவத்தின் முக்கியமான பண்பாகும். எனவே தான், தாய்த்திருச்சபை இறைமக்களின் பகிர்வை அதிகமாக எதிர்பார்க்கிறது. அவர்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட கொடைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைப்பும்விடுக்கிறது. குறிப்பாக, திருச்சபையின் முக்கியமான விழாக்களிலும், முக்கியமான காலங்களிலும், கொடுத்தலை அதிகமாக வலியுறுத்திச் சொல்கிறது. கொரிந்து நகர மக்களுக்கு, கொடுத்தல் எப்படி இருக்க வேண்டும் என்கிற செய்தியை, தூய பவுலடியார் வழங்குவதை இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம்.

நாம் கொடுக்கிறபோது, முகமலர்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் என்று தூய பவுலடியார் கூறுகிறார். நாம் கொடுப்பது கட்டாயத்தினால் இருக்கக்கூடாது. அல்லது இதனை நான் கொடுத்து தான் ஆக வேண்டுமா? என்கிற இரண்டுவிதமான மனநிலை கொண்டும் கொடுக்கக் கூடாது. இறைவன் எனக்கு தந்திருக்கிறார். இறைவனிடமிருந்து நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். பெற்றுக்கொண்ட இந்த கொடையை, நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் நம் உள்ளத்தில் நிறைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனநிலையோடு நாம் கொடுக்கிறபோது, இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார். நம்முடைய தேவைகளையெல்லாம் நிறைவேற்றுவார். நாம் மற்றவர்களுக்கு இன்னும் அதிகமாக கொடுத்து வாழ்வதற்கு, நம்மை தன்னுடைய அருள்வளத்தால் நிரப்புவார் என்று, பவுலடியார் கூறுகிறார்.

இன்றைக்கு மக்கள் நுகர்வுக்கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எவ்வளவுக்கு அதிகமான பொருட்களைச் சேர்த்து வைக்க முடியுமோ, அவ்வளவுக்கு நாம் பொருட்களைச் சேர்த்து வைக்க ஆசைப்படுகிறோம். மற்றவர்களோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு வருவது கிடையாது. இப்படிப்பட்ட மனநிலையை அகற்றி, இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற செல்வங்களை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ முன்வருவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.